தீபத்திருநாளைக் கொண்டாட ஒவ்வோர் ஆண்டும் நான்கு தலை முறையினர் ஒரே வீட்டில் கூடுவர். அந்த மூவறை வீட்டுச் சொந்தக்காரர், திருவாட்டி நடேசன் பிள்ளை முத்துலட்சுமிக்கு வயது 96. அவருக்கு 10 பிள்ளைகள், 24 பேரப்பிள்ளைகள், 23 கொள்ளுப் பேரப்பிள்ளைகள்.
இப்படி கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட இக்குடும்பம் தீபாவளிக்கு மட்டுமல்லாமல் அன்னையர் தினம், தேசிய தினம், கிறிஸ்மஸ் போன்ற முக்கிய பண்டிகைகளையும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
பண்டிகை காலத்தில் ஹெண்டர்சன் சாலையில் உள்ள திருவாட்டி முத்துலட்சுமி வீட்டில்தான் அனைவரும் ஒன்றுகூடுவர்.
புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் மட்டுமன்றி தாய்மார்களுக்கும் சேவையாற்றும் குழந்தைப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த திருவாட்டி முத்துலட்சுமி, பத்தாண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றார்.
மகப்பேறு பராமரிப்புக்கே புக்கிட் மேரா கம்பத்து வட்டாரத்தில் பெயர் போனவராக இருந்தவர் திருவாட்டி முத்துலட்சுமி.
தம்முடைய எட்டாவது பிள்ளையின் வீட்டில் தற்போது வசித்து வரும் இவர், குடும்பத்தினர் அனைவருக்காகவும் நாவுக்குச் சுவை சேர்க்கும் பிரியாணி உணவைச் சமைப்பது வாடிக்கை.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் அவர் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார்.
“எங்களுக்காக எதைச் சமைத்தாலும் அது ருசியாகவே இருக்கும். இன்றுவரை அவர் சமைக்கும் அதே பாணியில் எங்களில் யாராலும் சமைக்க முடியவில்லை. சிறப்புக் கொண்டாட்டங்களின்போது அவர் சமைக்கும் மீன், கோழி, இறைச்சி பிரியாணி அனைவருக்கும் பிடித்தமான உணவுவகைகளாக இன்றும் இருந்து வருகின்றன,” என்றார் அவருடைய மகளான அஞ்சலை தேவி, 67.
ஒவ்வொரு தீபாவளிக்கும் இனிப்புப் பலகாரங்களிலிருந்து காரவகை தின்பண்டங்கள் வரை திருவாட்டி முத்துலட்சுமியே தம் கைப்படச் செய்து வந்தார்.
முறுக்கு, நெய் உருண்டைகள், குவே டார்ட் போன்றவற்றைச் செய்வதில் கைதேர்ந்தவர்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் கீழே விழுந்துவிட்டதை அடுத்து அவரால் தொடர்ந்து செய்ய முடியவில்லை.
இதனால் கடைகளிலிருந்து பலகாரங்களை வாங்கத் தொடங்கிவிட்டனர் திருவாட்டி முத்துலட்சுமியின் குடும்பத்தார்.
தன்னுடைய கொள்ளுப்பாட்டிக்குப் பேசுவதில் தற்போது சிரமம் இருந்து வந்தாலும் அவர் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருப்பதாகவும் அவரைச் சுற்றி நிறைய பேர் இருப்பதை அவர் விரும்புவதாகவும் திருவாட்டி முத்துலட்சுமியின் 17 வயது கொள்ளுப் பேரன் அனில் ஷா கூறினார்.
அத்துடன் பண்டிகை காலத்தில் அவரைச் சென்று பார்ப்பதற்கும் மகிழ்விப்பதற்கும் இதுவே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருவாட்டி முத்துலட்சுமிக்குள் ஒளிந்திருக்கும் மற்றுமொரு திறமை, நடனம் ஆடுவது.
“இந்த வயதிலும் யாராவது அவரை நடனமாடச் சொன்னால், அவர் தாளத்திற்கு ஏற்ப ஆட்டம் போடுவார்,” என்றார் அனில்.
மேலும் “அவரால் நாங்கள் பெறும் இன்பம் அளவற்றது. நாங்கள் இந்த அளவுக்குக் கொடுத்து வைத்தவர்கள் என்பதை உணரவும் கற்றுக்கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.
“வளர்ந்து வரும் எங்கள் பிள்ளைகள், என் அம்மாவிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எங்களின் ஆசை.
“அப்போதுதான் வாழையடி வாழையாக இருந்து வரும் நம் கலாசாரம், பாரம்பரியம், படிப்பினைகள், விழுமியங்கள் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்குச் கொண்டு போய் சேர்க்கலாம்,” என்றார் திருவாட்டி முத்துலட்சுமியின் ஆக இளைய பிள்ளையான சாந்தா, 52.
தன் பாட்டியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளன என்று பகிர்ந்துகொண்டார், திருவாட்டி முத்துலட்சுமியின் பேத்தி, கலாதேவி பாலகிருஷ்ணன், 47.
“சிரித்த முகத்துடன் அறிமுகம் இல்லாதவரையும் வரவேற்று, உபசரிக்கும் நல்ல குணம் கொண்டவர்.
தீபாவளி அன்று காலையிலேயே அவரைச் சென்று பார்த்து அவரது ஆசீர்வாதத்தைப் பெறும்போது அன்றைய பொழுதுக்கு அது மேலும் தித்திப்பை ஊட்டுகிறது,” என்றார் கலாதேவி.
இன்றும் வழக்கம்போல் அனைவரும் திருவாட்டி முத்துலட்சுமி வீட்டில் கூடி தங்களின் கொண்டாட்டத்தைத் தொடங்கினர்.