உலகம் முழுவதும் வேலை பார்த்து சம்பாதிக்கும் ஊழியர்கள், கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக திக்குமுக்காடிப்போய்விட்டனர்.
வேலை போனதோடு மட்டுமின்றி, தாங்கள் பார்த்துவந்த வேலைகளைப் போன்ற வேலைகள் இனிமேல் இல்லாமலேயே போய்விடுமோ என்ற அச்சமும் பலரை வாட்டி வதைக்கிறது. அந்தக் கவலையும் அச்சமும் சிங்கப்பூரிலும் உண்டு என்றாலும், தளவாடப் போக்குவரத்து, பாதுகாவல், துப்புரவு போன்ற துறைகளைப் பார்க்கும்போது அங்கு நிலைமை வேறு விதமாக இருக்கிறது.
நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் வழங்கும் இந்தத் துறைகள், ஆயிரமாயிரம் ஊழியர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்கின்றன.
விழித்துக்கொண்டால் பிழைத்துக்கொள்ளலாம் என்பதையே இந்தத் துறைகள் வெளிப்படுத்துகின்றன.
‘அடாலியன்’ குழுமத்தைச் சேர்ந்த ‘கிளீனிங் எக்ஸ்பிரஸ்’ என்ற நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவுச் சேவையை வழங்கி வருகிறது.
புத்தாக்கத்தை தழுவிக்கொள்வது, சேவையில் உன்னத நிலையை எட்டுவது ஆகிய குறிக்கோள்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுள்ள இந்த நிறுவனத்தையும் கொவிட்-19 கிருமி விட்டுவைக்கவில்லை. கடும் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்ததால், தேவை இருந்தாலும் சேவை வழங்க முடியாத சூழலை அனுபவித்த இந்த நிறுவனம், கட்டுப்பாடுகள் அகல அகல ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தன்னை நாடி வருவதைக் கண்டது.
ஏறத்தாழ 1,000 ஊழியர்களுடள் செயல்படும் கிளீனிங் எக்ஸ்பிரஸ், ஊழியர், நிறுவனம், அரசாங்கம் என முத்தரப்பினரின் ஒருமித்த முயற்சியைக் கொண்டு ஊழியர்களை முன்னிறுத்தி அவர்களின் திறன் வளர்ச்சியிலும் மாற்றுத்துறைகளிலிருந்து வருவோருக்குத் திறன் மறுபயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
“அத்தியாவசியத் துறைகளில் ஒன்றாக துப்புரவுத் துறை உள்ளது. இதுபோன்ற துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்டு ஊக்க மளிக்கப்படவேண்டும் என்பதையே இந்தக் காலகட்டம் அறிவுறுத்துகிறது.
“உள்ளூர் ஊழியர்களை இந்தத் துறைகளில் தொடர்ந்து ஈர்க்க அரசாங்க உதவி தேவைப்படும்,” என்று அடாலியன் குழுமத்தின் உரிமை யாளரரான திரு அப்துல் அஜீஸ் யூசோஃப், 49, தெரிவிக்கிறார்.