பாலியல் ரீதியான அனைத்து வகை குற்றங்கள் தொடர்பில் 2017ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரை கிடைத்திருந்த புகார்களின் மொத்த எண்ணிக்கை 6,998 என்று சிங்கப்பூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
2020ல் 'அவேர்' (AWARE) அமைப்பின் பாலியல் தாக்குதல் தொடர்பான பராமரிப்பு மையம் (எஸ்ஏசிசி) கண்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உயிர் பிழைத்தவர்களில் 94 விழுக்காட்டினர் பெண்களாக இருந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக 'எஸ்ஏசிசி'யில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பாலியல் தாக்குதலுக்குப் புதிதாக உட்பட்டவர்கள் பலர், உதவி நாடி வருகின்றனர். 2019ஆம் ஆண்டு புதிதாக 75 பேரும் 2020ஆம் ஆண்டு புதிதாக 51 பேரும் எஸ்ஏசிசியின் உதவியை நாடியுள்ளனர்.
அமைப்பின் 2020ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி:
பரிச்சயமான ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகமாக 29 விழுக்காட்டில் உள்ளன. அடுத்த நிலையில் காதலர் அல்லது வாழ்க்கைத் துணையால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளானோர் 22 விழுக்காட்டினர் ஆவர்.
வேலையிடத்தில் பணிபுரியும் சக ஊழியரால் 14 விழுக்காட்டினரும் குடும்ப உறுப்பினரால் 14 விழுக்காட்டினரும் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர்.
அந்நியரைக் காட்டிலும் தெரிந்த ஒருவரால் பாலியல் வன்கொடுமை ஏற்படும் சாத்தியம் அதிகம் என்பதை இப்புள்ளிவிவரங்கள் குறிக்கின்றன.