தம் குடும்பத்துக்காக புக்கிட் பாஞ்சாங் பத்தாம் கல்லில் திரு சுப்பையா கம்பத்து வீடு ஒன்றைத் தாமே கட்டினார். பிள்ளைகளுக்குத் தண்ணீர் எளிதில் கிடைக்கவேண்டும் என்பதற்காக வீட்டருகே 13 அடி ஆழத்தில் கிணறு ஒன்றையும் தோண்டினார். கடமை உணர்வுமிக்க ஒரு தந்தையாக இன்றும் நடைபோடுகிறார் 100 வயது நிரம்பிய திரு சுப்பையா.
மனைவி கமலத்தைக் கரம்பிடித்த 75ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் தந்தையர் தினத்தையும் கொண்டாட இவரின் ஆறு பிள்ளைகளும் நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.
தற்போது ஜூரோங் வட்டாரத்தில் வசிக்கும் திரு சுப்பையா, மலேசியாவின் கோத்தா திங்கி பகுதியில் 1922ஆம் ஆண்டு பிறந்தார். ஏழு வயதாக இருந்தபோது தம் தாய்தந்தையரை இழந்தார்.
எட்டு வயது முதல் வேலை செய்யத் தொடங்கிய திரு சுப்பையா, தீயப் பழக்கங்கள் ஏதுமில்லாத ஓர் உழைப்பாளியாக இருந்ததைக் கண்டு அவருடன் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்த்த கமலத்தின் அண்ணனும் தந்தையும் இருவருக்கும் மணமுடிக்க முடிவு செய்தனர்.
"பொறுப்பான தந்தையாக இவர் இருப்பார் என்ற நம்பிக்கை அப்போதே எனக்கு இருந்தது," என்றார் திருமதி கமலம், 90.
தனக்கென எந்த ஒரு வீண் செலவையும் செய்யாமல் குடும்பத்திற்காகக் கடுமையாக உழைத்த சிக்கனவாதி தம் தந்தை என்று அவரின் மூன்றாவது பிள்ளை திரு பாலகிருஷ்ணன், 64, தெரிவித்தார்.
"பிள்ளைகளின் தேவைகளை அறிந்தவர். பிறந்தநாள், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் புத்தாடை, பலகாரம், பட்டாசு போன்றவற்றுக்காக செலவு செய்து எங்களை மகிழ்ச்சிப்படுத்துவார்," என்று 'எஸ்டி என்ஜினியரிங்' நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.
வீண் செலவு கூடாது, பிறர்மீது பொறாமை கூடாது போன்ற கொள்கைகளைத் தம் தந்தை தங்களுக்கு அடிக்கடி போதித்ததாக திரு சுப்பையாவின் மூத்த பிள்ளை திருமதி வள்ளியம்மா, 69, தெரிவித்தார்.
அண்டைவீட்டில் வசித்த திரு சுப்பையாவையும் அவர் மனைவியையும் 'பெரியப்பா, பெரியம்மா' எனத் தாமும் தம் அக்காவும் அழைப்பதாகக் குறிப்பிட்டார் வசந்தி சொக்கலிங்கம், 61.
"என் தந்தையை அவர் நல்வழிப்படுத்தியதுடன் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு எங்கள் குடும்பத்திற்கு மற்றுமொரு தந்தையாக இருந்தார் சுப்பையா பெரியப்பா," என்றார் அவர்.