லண்டன்: நியூகாசல் யுனைடெட் குழுவிற்கு எதிராக செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் செல்சி குழு 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதனையடுத்து, செல்சி குழுவினர்மீது ரசிகர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அதன் நிர்வாகி மௌரிசியோ பொக்கெட்டினோ கேட்டுக்கொண்டுள்ளார்.
இப்பருவத்தில் தடுமாறிவரும் செல்சி, இப்போது 39 புள்ளிகளுடன் பட்டியலின் 11ஆம் இடத்தில் உள்ளது. ஆயினும், ஏழாம் இடத்தில் உள்ள வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவைவிட நான்கு புள்ளிகளே குறைவாகப் பெற்றுள்ளது.
அதனால், இன்னும் சற்று முனைப்புடன் ஆடி வெற்றிகளைக் குவித்தால், குறைந்தபட்சம் அடுத்த பருவ ஐரோப்பிய கான்ஃபரன்ஸ் லீக்கிற்காவது செல்சி முன்னேறலாம்.
இந்நிலையில், செல்சி குழுவினர் ஒன்றிணைந்து ஆட வேண்டியது அவசியம் என்று பொக்கெட்டினோ வலியுறுத்தியுள்ளார்.
அடுத்ததாக, மார்ச் 17ஆம் தேதி எஃப்ஏ கிண்ணக் காலிறுதி ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டியுடன் செல்சி மோதவுள்ளது.