மெல்பர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய பொது விருதுப் போட்டிகள் இம்மாதம் 20ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை நடக்கவிருக்கின்றன.
முதற்கட்டமாக, தகுதிச் சுற்றுப் போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் எரிந்து வரும் கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் எழுந்த புகையால் விளையாட்டாளர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
தகுதிச் சுற்றின் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்ற ஸ்லோவேனிய வீராங்கனை டலிலா யாக்குபோவிச், காற்றின் தரம் மோசமாக இருந்ததால் கடுமையாக இருமினார். இதையடுத்து, இடையிலேயே அவர் ஆட்டத்தைக் கைவிட்டு, இன்னொருவர் துணையுடன் திடலைவிட்டு வெளியேற நேர்ந்தது.
“என்னால் நடக்கவே முடியாததால் எங்கே நிலைகுலைந்து விழுந்து விடுவேனோ என அஞ்சினேன்,” என்றார் டலிலா.
இதேபோல, கனடிய வீராங்கனை யூஜெனி பூஷார்டும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, போட்டியின் இடையே திடலைவிட்டு வெளியேறி, சற்று நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் திரும்பினார்.
மெல்பர்ன் நகரவாசிகள் நேற்று வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், புகைமூட்டம் மோசமாக இருந்தால் ஆஸ்திரேலிய பொது விருது போட்டிகளைத் தள்ளிவைக்கத் தயங்கமாட்டோம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.