லண்டன்: தமது அணி இந்தப் பருவத்தில் தனது முழுமையான திறனை வெளிப்படுத்தத் தவறிவிட்டதாக சௌதாம்ப்டன் அணித் தலைவர் ஜேம்ஸ் வார்ட் புரோஸ் வருத்தத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஃபுல்ஹாமிடம் 2-0 என்னும் கோல் கணக்கில் சௌதாம்ப்டன் வீழ்ந்தது. அதனைத் தொடர்ந்து பிரிமியர் லீக் போட்டிகளிலிருந்து அது வெளியேறியது. இரண்டாம் நிலை போட்டிகளில் இனி அது விளையாடும். 36 போட்டிகளில் விளையாடி 24 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கும் சௌதாம்ப்டன் பட்டியலின் கடைசியில் இருக்கிறது.
போட்டி முடிந்த பின்னர் பேசிய வார்ட் புரோஸ், “தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. கடினமான சூழ்நிலைகளில் போராடினோம் என்பதை அறிவோம். இருப்பினும் நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும்.
“எப்போதும் ஒரே மாதிரியான திறமைகளை நாங்கள் வெளிப்படுத்துவதில்லை. எங்களது தரம் குறைந்துவிட்டதால் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டோம்,” என்றார்.
சௌதாம்ப்டன் அண்மைய காலமாக பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை. மாறாக, அதன் வீழ்ச்சி தொடர்ந்துகொண்டே சென்றது. அணியின் நிர்வாகிகளும் நீடித்து நிலைக்கவில்லை. நேதன் ஜோன்ஸ், ரால்ஃப் ஹேசன்ஹுட்டி ஆகியோர் அடுத்தடுத்து நீக்கப்பட்ட பின்னர் இந்தப் பருவத்தின் மூன்றாவது நிர்வாகி தற்போதைய ரூபன் செல்லெஸ்.