இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டும் ஒரு சமயம் போலத்தான்! அதனால், தேசிய அணியில் இடம்பெற்று, சிறந்து விளங்கும் இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குப் பேரும் புகழும் பணமும் கொட்டோ கொட்டென்று கொட்டுவது உறுதி.
அதுவும் இப்போதைய காலகட்டத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் விளையாட்டாளர்களில் ஒருவராகத் திகழும் விராத் கோஹ்லி போன்றவர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.
அனைத்துலகப் போட்டிகளில் 25,000 ஓட்டங்களுக்கு மேலும் 75 சதங்களையும் அடித்துள்ள கோஹ்லிக்கு உலக அளவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாளில் விராத் கோஹ்லியின் படத்தைப் போட்டு, அதனைப் பற்றி 100-120 சொற்களில் விளக்கி எழுதுமாறு வினா கேட்கப்பட்டுள்ளது.
அனைத்துலகப் போட்டிகளில் கோஹ்லி தமது 71வது சதத்தை அடித்தபின், மட்டையை உயர்த்தி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சியே அப்படம். 2022ஆம் ஆண்டு நடந்த ஆசியக் கிண்ணப் போட்டிகளில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் தமது 71வது சதத்தை அடித்திருந்தார்.
கோஹ்லி, கேள்வியாக இடம்பெற்ற வினாத்தாள் சமூக ஊடகங்களில் பரவலாகி, பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதிலும் டுவிட்டர்வாசி ஒருவர், தான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது ஏன் இத்தகைய கேள்விகளெல்லாம் கேட்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார்.