குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சாதனை வெற்றிபெற்று 7வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. 1995ஆம் ஆண்டு தொடங்கி 27 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த வெற்றியின் மூலம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு அந்த மாநிலத்தை ஆட்சி செய்வதன் மூலம் 32 ஆண்டு கால ஆட்சியாக பாஜக ஆட்சி விளங்கும். முதல்வர் பூபேந்திர படேல், 60, புதிய அரசாங்கத்திலும் முதல்வராகத் தொடர்வார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 12) புதிய அரசாங்கம் பதவி ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மீது குஜராத் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பூபேந்திர படேல் நேற்று பிற்பகலில் கூறினார்.
மொத்தம் 182 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் பணி நேற்றுக் காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடக்கம் முதலே பாஜக முன்னிலையில் இருந்து வந்தது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி 53.33% வாக்குகளை பாஜக பெற்று அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தது. அதற்கு அடுத்த நிலையில் 26.9 விழுக்காடு வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்திலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி 12 விழுக்காடு வாக்கு களைப் பெற்று மூன்றாம் இடத்திலும் இருந்தன.
ஆட்சி அமைக்க 92 தொகுதிகளில் வெல்ல வேண்டிய நிலையில் பாஜக 155 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்தது. 150 தொகுதிகளுக்கு மேல் அக்கட்சி வெற்றிபெற்றால் அது சாதனை ஆகும். இதற்கு முன்னர், 1985ஆம் ஆண்டு 149 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றதே குஜராத்தில் இதுவரை சாதனையாக இருந்து வந்துள்ளது. பாஜக அதிகபட்சமாக 127 இடங்களில் (2002 தேர்தல்) வென்றுள்ளது.
குஜராத் மாநிலம் முழுவதும் நேற்று பாஜகவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 2017 தேர்தலில் பாஜக 99 இடங்களிலும் காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
சிறிய வடமாநிலமான இமாசலப் பிரதேசத்தில் ஆட்சி மாறும் வரலாறு இப்போதும் மாறவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக, ஆளும் கட்சியாக இருக்கும் எந்தவொரு கட்சியும் அடுத்து நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலில் வெற்றிபெற்றதில்லை. அந்த வகையில், இதுவரை இமாசலப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக இப்போது தோல்வியடைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 68 தொகுதிகளில் 39ல் காங்கிரசும் 26ல் பாஜகவும் முன்னிலையில் இருந்தன. 2017 தேர்தலில் 44 இடங்களில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது.