மழைநீர் வகுப்பறைக்குள் சொட்டும் அரசாங்கப் பள்ளியின் அவலநிலையை மாற்றி அதை ஓர் வெளிநாட்டுப் பள்ளியின் தரத்திற்கு சீரமைத்து தந்துள்ளார் அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் சுப்ரமணியம்.
இவர் தமிழகத்தின் ‘ஹைடெக்’ பள்ளியாக கொடுவாய் அரசுப் பள்ளியை மாற்றிக்காட்டுவதை லட்சியமாகக் கொண்டு, அதை நிறைவேற்றியும் காட்டியுள்ளார்.
ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் கொடுவாய் பள்ளி புதுப்பொலிவு பெற்றிருப்பது, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்கள் மன திலும் மகிழ்ச்சியை நிறைத்துள்ளது.
திருப்பூர் கே.எம். நிட்வேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுப்ரமணியம். திருப்பூர் அருகே உள்ள கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்.
இந்தப் பள்ளியில் படித்த அவர், தன்னால் இயன்றதை பள்ளிக்கு கொடுக்க முடிவெடுத்தார். இதற்காக ஒரு லட்சமல்ல, இரண்டு லட்சமல்ல, ஒரு கோடி ரூபாய் செலவழித்து வகுப்பறைகளுக்கு தரைத்தளம், புதிய மேற்கூரை, 58 கழிவறைகள், விருந்தினர் அறை, கலையரங்கம் என அமர்க்களப்படுத்தி உள்ளார்.
அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வாகன நிறுத்தம், பள்ளி வளாகத்தில் தரைத்தளம், கழிவுநீர் கட்டமைப்பு, குடிநீர் வசதி, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சாய்வுத் தளம், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு, விளையாட்டு உபகரணங்கள் பாதுகாப்பு அறை, வகுப்பறை கட்டடம், சுற்றுச்சுவர், புராஜெக்டர், திரைகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறையும் கட்டப்பட்டுள்ளது.
எல்லோரையும் கவர்ந்திழுக்கும் வகையில் வண்ணங்களில் பளிச்சிடுகின்றன பள்ளிச் சுவர்கள்.
“முன்னாள் மாணவன் என்ற முறையில் கொடுவாய் அரசுப் பள்ளிக்குச் சென்றபோது, கழிவறையின் துர்நாற்றம்தான் எங்கும் வீசியது. ஏறத்தாழ 1,200 மாணவர் படிக்கும் பள்ளியில் போதிய கழிவறை இல்லை; தட்டியால் மறைக்கப்பட்ட கழிவறைகளை மாணவர்கள் பயன்படுத்தினர். மேற்கூரை பெயர்ந்த, தரைத் தளம் இல்லாத வகுப்பறை; உடைந்த சுவர்கள் என மிக மோசமான நிலையில் பள்ளிக்கூடம் இருந்தது. பள்ளியின் நிலைமை இப்போது ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது,” என்று தான் பயின்ற பள்ளிக்கு புத்துயிர் கொடுத்துள்ள சுப்ரமணியம் கூறினார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity