சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று இரண்டாவது கட்டத்தை எட்டும் நிலையில், அங்கு மொத்தம் 42 பேரைக் கிருமிகள் தொற்றி இருக்கின்றன.
அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா கிருமிப் பரவுவதைத் தடுக்க புதிய உத்திகளுடன் அரசாங்கம் தீவிரமாகக் களத்தில் குதித்தது.
வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த 209,284 பேர் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் மொத்தம் 43,537 பேர் மருத்துவத் துறையின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 227 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து வந்த 15,000க்கும் மேற்பட்டவர்களும் குடியுரிமை ஆணையத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 85,000 பேருக்கும் மேற்பட்டோர் இப்போது வீட்டுக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
13,323 தனி படுக்கைகளும் 3,044 செயற்கை சுவாசச் சாதனங்களும் தயாராக இருக்கின்றன.
சிகிச்சை முடிந்து இரண்டு பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக் கிறார்கள். கிருமித்தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 208 பேரின் ரத்தப் பரிசோதனைகள் முடிவு இனிமேல்தான் தெரியவரும்.
இந்த நிலையில், கொரோனா கிருமியை ஒழிக்கும் முயற்சிகளில் மேலும் ஒன்றாக, கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் வீடுகளைச் சுற்றிலும் உள்ள 8 கி.மீ. வட்டாரத்திற்குள் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை நேற்று அறிவித்தது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மக்கள் வசிக்கும் சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் இப்புதிய நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அந்தத் துறை தெரிவித்தது.
கிருமித்தொற்று உள்ள ஒருவர் வசிக்கும் வீட்டைச் சூழ்ந்துள்ள 8 கி.மீ. பரப்பளவுப் பகுதிகளில் கிருமிகள் பரவாமல் பாதுகாப்புக் கேடயத்தை உருவாக்கும் முயற்சியாக அந்தப் பகுதிகள் தனிமைப்படுத்தப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அப்பகுதிகளில் 50 வீடுகளுக்கு ஓர் அதிகாரி என்ற முறையில் வீடு வீடாகச் சென்று நோய்த்தொற்று கண்டறியும் பணி நடக்கும்.
அத்தகைய அதிகாரிகள் நான்கு பேருக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் இருப்பார்.
இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் யாருக்காவது இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். வயதானவர்களின் விவரங்களும் சேகரிக்கப்படும்.
கொரோனா கிருமித்தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம் உள்ள பிரிவினர் கண்டறியப்பட்டு அவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தப்படும். முதியோர், கர்ப்பிணிகள், நீரிழிவு, ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, தமிழக அரசு கொவிட்-19 தொடர்பில் வழிகாட்டி நெறிமுறைகளையும் புதுப்புது தகவல்களையும் தெரிவிக்க ஏதுவாக வாட்ஸ்அப் சாட்பாக்ஸ் ஒன்றைத் தொடங்கியது. மக்கள் 9035766766 என்ற எண் மூலம் விவரம் அறியலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.