உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் புயலால் தமிழகம் அதிக அளவு பாதிக்கப்படவில்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
“புயல் வீசப் போகிறது என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்ததும் புயலால் பாதிக்கும் மக்களுக்கு எடுக்க வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கியிருந்தோம். கடலுார் மாவட்டத்தில் அதிகளவு சேதமாகும் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியிருந்ததால் மாவட்ட ஆட்சியரை தலைமைச் செயலரும் நானும் அடிக்கடி தொடர்புகொண்டு பேசினோம். அமைச்சர், எம்எல்ஏக்கள், எஸ்.பி ஆகியோரையும் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்தினோம்.
“வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமாரும் சென்னை எழிலகத்தில் தங்கி, கட்டுப்பாட்டு அறை அமைத்து, புயல் தொடர்பாக வெளியில் இருந்து வரும் செய்திகளை வாங்கி எனக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்து முன்னெச்சரிக்கைகளும் சரியான முறையில் எடுக்கப்பட்டதால் ‘நிவர்’ புயலால் பெரியளவில் பாதிப்பில்லை,” என்று முதல்வர் குறிப்பிட்டார்.
கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழகம் முழுவதும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க 4,133 முகாம்கள் தயார் செய்யப்பட்டன. அவற்றில் 13 லட்சம் பேரை தங்க வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், 2,991 முகாம்களில் 2.30 லட்சம் பேர் மட்டுமே தங்க வைக்கப்பட்டனர்.
புயலால் வாழை, மரவள்ளி பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் முழுமையாக கணக்கெடுக்கவில்லை. அந்த பணி முடிந்தால் முழு விவரம் தெரியும்.
இதேபோல், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறித்து கணக் கெடுத்து, விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும். மேலும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் காப்புறுதி எடுத்திருந்தால் உடனே இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே “மின் வாரியம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளால் உயிரிழப்பு இல்லாமல் மக்களைப் பாதுகாத்துள்ளோம்,’’ என்று மின் துறை அமைச்சர் தங்க மணி தெரிவித்துள்ளார்.
சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட 16 மாவட்டங் களில் 2,250 வழித்தடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது என்றார்.
மின் விநியோகம் படிப்படியாக வழக்க நிலைக்குத் திரும்பும் என்று அவர் கூறினார்.