சென்னை: தமிழகத்தில் இன்னும் இரு வாரங்களுக்குள் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது ஆளுங்கட்சிக் கூட்டணியா, எதிர்க்கட்சிக் கூட்டணியா என்பது குறித்த கேள் விக்கு புதிய கருத்துக் கணிப்பு கள் விடை கண்டுள்ளன.
சம பலத்துடன் களமிறங்கி உள்ள அதிமுக-திமுக ஆகிய இருபெரும் கட்சிகளுக்குள் எந்தக் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளது என்பது குறித்து 'ஜனநாயகக் கூட்டமைப்பு மற்றும் உங்கள் குரல்' என்ற தன்னார்வ அமைப்பு கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.
அதன்படி, இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 122 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும் திமுக கூட்டணி 111 இடங்களில் வெற்றிபெறும் என்றும் அமமுக ஒரு இடத்தைக் கைப்பற்றும் என்றும் முடிவுகள் கூறுகின்றன.
'ஜனநாயகக் கூட்டமைப்பு மற்றும் உங்கள் குரல்' என்ற இந்த தன்னார்வ அமைப்பு கடந்த 2016ல் கருத்துக் கணிப்புகளைத் துல்லியமாக வெளியிட்டதை அடுத்து, இந்த அமைப்பின் கருத்துக் கணிப்புகளைத் தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில், இம்முறை அதி முகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அமைப்பு கூறியுள்ளது.
இம்மாதம் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 80,000க்கும் அதிகமான மக்களிடம் இந்தக் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கருத்துக் கணிப்பு குறிப்பிட்டுள்ளது.
அதேபோல, கருணாநிதி இல்லாமல் திமுக சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்றாலும், திமுகவிற்கான நிரந்தர வாக்கு வங்கிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது பெரும் பலமாக அமைந்துள்ளது.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் போல் இல்லாமல் தற்போது திமுக கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளில் தோல்விகளைச் சந்திக்கும் நிலையும் உள்ளது.
இது திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசனின் மநீம கட்சியின் வரவு திமுக கூட்டணியின் வாக்குகளை வெகுவாக பாதித்துள்ளது. அமமுக கூட்டணி, மநீம கூட்டணிகள் சேர்ந்து 10% வாக்குகள் பெறலாம். இருப்பினும் அந்த வாக்குகள் தொகுதிகளைக் கைப்பற்ற உதவாமல் போனாலும் இரு முக்கிய கட்சிகளின் வெற்றிவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.