மதுரை: ஒருபுறம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் குவிந்து வரும் நிலையில், மறுபுறம் மதுரை, கன்னியாகுமரி, திருப்பூர், ேவலூர், திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்தடுப்பூசிகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல அரசு தடுப்பூசி மையங்களும் மூடப்பட்டுள்ளதால் தடுப்பூசி போடமுடியாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சில இடங்களில் தடுப்பூசிகள் இருப்பில் இல்லையென சுகாதாரத் துறை அதிகாரிகள் கைவிரித்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கிருமித்தொற்று கடந்த சில வாரங்களாகவே வேகமாகப் பரவி வருகிறது.
இதையடுத்து, முன்பெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள அவ்வளவாக ஆர்வம் காட்டாத மக்கள், இப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள விரைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை கடந்த வாரத்தைவிட மும்மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் வாரத்தில் 70,000 பேருக்கு மட்டுமே போடப்பட்டு வந்த தடுப்பூசி, தற்போது ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் பேருக்கும் மேல் போடப்பட்டு வருவதாகவும் கடந்த வெள்ளியன்றும் 2,01,495 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருநெல்வேலி, தூத்துக்குடி, மன்னாா்குடி, நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி போடச் சென்றவா்களில் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டன. மற்றவா்கள் மறுநாள் வந்து போட்டுக்கொள்ளலாம் என்று திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனால் பல்வேறு மையங்களில் ஊசி போட வந்திருந்தவா்களுக்கும் மருத்துவப் பணியாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருசில மையங்களில் தடுப்பூசி போட வந்தவா்கள் காலை முதல் காத்திருந்து, தடுப்பூசி போடாமலேயே வீடு திரும்பினா்.