ராணிப்பேட்டை: அதிமுக உறுப்பினர்கள் சிலர் சசிகலாவுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருவதால், அவர்களைக் கட்சியை விட்டு நீக்கி, ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் அதிமுக தலைவர்கள்.
இதுகுறித்து கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் சேலத்தைச் சேர்ந்த இராம கிருஷ்ணன், சிவகங்கையைச் சேர்ந்த ஆர்.சரவணன், ஆர்.சண்முகப்பிரியா, நெல்லையைச் சேர்ந்த திம்மராஜபுரம் ராஜகோபால், டி. சுந்தர்ராஜ் ஆகிய ஐவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, "அரசியலை விட்டு இனி ஒருபோதும் விலகமாட்டேன்,'' என சசிகலா தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, இப்போது தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார்.
ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் சசிகலா பேசியபோது, "அம்மாகூட நானும் சேர்ந்து வளர்த்த கட்சி வீணாகி விடக்கூடாது. இனி அதிமுகவைக் காப்பாற்றுவதே என் வேலை. இனி ஒதுங்கி இருப்பேன், விலகி இருப்பேன் என நான் சொல்லமாட்டேன். தொண்டர்களின் நம்பிக்கை வீண் போகாது. நான் நிச்சயம் வருவேன்," என்று கூறியுள்ளார்.