பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மோடி தமிழில் வாழ்த்து
சென்னை: அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு பதவியிடங்களுக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுமார் 27 ஆயிரம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயது மூதாட்டியான பெருமாத்தாளும் ஒருவர். அவர், சிவந்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அண்மையில் இருகட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதன் மூலம் வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், இந்த கிராம பஞ்சாயத்துகளில் வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 27,792 பதவியிடங்களுக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் முதல் கூட்டமும் பதவியேற்பு நிகழ்வும் நேற்று நடைபெற்றது. அனைவரும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் பதவியேற்றனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்," எனப் பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 8 கவுன்சிலர், 41 பஞ்சாயத்து தலைவர்கள், 332 வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதே வேளையில் திமுக சுமார் 90 விழுக்காடு இடங்களைக் கைப்பற்றி உள்ளது.