சென்னை: தடுப்பூசி போட்டுக்கொண்டால் 25 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு வாலாஜாபாத் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வாலாஜாபாத்தை அடுத்துள்ள முத்தியால்பேட்டை ஊராட்சியில் 90 விழுக்காட்டினர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மீதமுள்ள பத்து விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருவதால் அவர்களைக் கவரும் வகையில் ஊராட்சி நிர்வாகம் 25 கிலோ இலவச அரிசி என்ற அறிவிப்பை வெளியிட்டது.
இதையடுத்து, ஏராளமானோர் நேற்று முன்தினம் தடுப்பூசி மையங்களுக்கு வந்தனர். அவர்களுக்கு முன்பே அறிவித்தபடி, இலவச அரிசி வழங்கப்பட்டது. இதனால் பலனடைந்தவர்கள் ஊராட்சி மன்றத்தின் இந்தச் செயலைப் பாராட்டி உள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் தடுப்பூசி போடும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதால், நவம்பர் மாதம் மத்திய அரசு சார்பில் 1.40 கோடி கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் 14 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 36,097 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் 1,172 பேர் தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.