சென்னை: அண்மையில் நடந்த '5ஜி' அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் '5ஜி' அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சில மாதங்களுக்கு முன் அனுமதியளித்தது.
கடந்த 26ம் தேதி '5ஜி' அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது.
பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன்-ஐடியா, அதானி குழுமம் ஆகிய நான்கு நிறுவனங்கள் ஏலத்தில் பங்கு கேற்றன.
இந்த ஏலத்தின் முதல் நாளன்று, இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டது என்று கூறப்பட்டது.
அதேபோல் கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற '4ஜி' ஏலத்தின் சாதனையை முறியடித்து இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் '5ஜி' அலைக்கற்றைக்கான ஏலம் ரூ.1.50 லட்சம் கோடி வரை மட்டுமே சென்றுள்ளது.
இதையடுத்து செய்தியாளர் களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, '2ஜி' அலைக்கற்றை ஏலத்திற்கு பின் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்று கூறினார்கள்.
"ஆனால் '5ஜி' அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுஉள்ளது. '5ஜி' அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம் போயுள்ளது. எஞ்சிய பணம் எங்கு சென்றது என்பது பற்றி மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்," என்று ஆ. ராஜா கூறியதாக தமிழக ஊடகம் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.