சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தை தென்மாவட்டங்களிலும் வீழ்த்தி தன் பலத்தைக் காட்ட அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார்.
இதை 'ஆபரேசன் சவுத்' என்று அவரது ஆதரவாளர்கள் கூறு
கிறார்கள்.
அதில் முதற்கட்டமாக மதுரை, சிவகாசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பழனிசாமி தமது சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராகப் பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக நேற்று முன்தினம் தென் மாவட்டங்களுக்கு வருகை தந்தார் அவர்.
மதுரை, சிவகாசி ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார் எடப்பாடி பழனிசாமி. மதுரை விமான நிலையத்தில், அவருக்கு அதிமுக தொண்டர்கள் மலர்கள் தூவியும் மேளதாளங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரிங் ரோடு வழியாக பிரசார வாகனத்தில் மேலக்கோட்டை அருகே சென்றபோது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் சாலையின் இருபுறமும் தொண்டர்கள் திரண்டு இருந்தனர்
பிரசார வாகனத்தில் எழுந்து நின்று வரவேற்பை ஏற்றுக்கொண்டு இரட்டை விரல்களை காண்பித்தவாறே சென்றார் பழனி சாமி.
சிவரக்கோட்டை பகுதியில் விவசாயிகள் ஏராளமாக திரண்டு விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் சிறக்க பல்வேறு திட்டங்களை வழங்கிய எடப்பாடியார் வாழ்க என்று கோஷமிட்டனர். மாலையில் சிவகாசி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
தொடர்ந்து மாலை ஆறு மணியளவில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவருக்கு வெள்ளி செங்கோல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. முதல்முறையாக இடம்பெற்ற தென்மாவட்ட சுற்றுப்பயணம் மிகப்பெரிய எழுச்சியாக அமைந்ததாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், மதுரையில் அனுமதியின்றி மேடை அமைத்தது, பதாகை வைத்தது தொடர்பாக 6 அதிமுக வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.