ரூ.11 கோடி செலவில் உருவாகியுள்ளது; அரிய பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
சிவகங்கை: கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
கீழடி பகுதியில் நடைபெற்ற அகழாய்வின்போது தமிழ், தமிழர் சார்ந்த ஏராளமான அரிய பொருள்கள் கிடைத்தன. இதன் மூலம் தமிழர்களின் பல்வேறு சிறப்பம்சங்களுக்கான வரலாறு பூர்வ சான்றுகள் கிடைத்ததாக உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அகழாய்வின்போது கிடைத்த அரிய பொருள்கள் அனைத்தையும் காட்சிப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. அதை ஏற்றுக்கொண்டு கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன் பின்னர் உரிய நடவடிக்கைகள் அனைத்தும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டன. அதன் பலனாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஒன்பது கட்டடங்களுடன் ரூ.11 கோடியே மூன்று லட்சம் செலவில் அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
செட்டிநாடு கட்டடக் கலையின் அடிப்படையில் இந்த அருங்காட்சியக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களை காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
அவையும் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த அருங்காட்சியகப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
மேலும் உள் அலங்காரப் பணிகள் முடிவடைந்துள்ளன என்றும் கீழடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உறைகிணறுகள், பானைகள், கெண்டி மூக்கு பானை, ஓர் அங்குலப் பானைகள் உள்ளிட்ட பல்வேறு பானைகளை காட்சிப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அருங்காட்சியகத்தை நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி, மார்ச் முதல் வாரம் தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாகவும் அப்போது கீழடி அருங்காட்சியகத்தை அவர் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.