சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தது முதல் பல்வேறு துறைகளும் பெரும் வளர்ச்சி கண்டு வருவதாகவும் அறநிலையத் துறையைப் பொறுத்தவரை 1,000 கோயில்களுக்கு குடமுழுக்குச் செய்விக்கப்பட்டு பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
இதன் தொடர்பில் எக்ஸ் இணையத் தளத்தில் அவர் பல விவரங்களைத் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கோட்பாட்டுடன் அரசாங்கம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது என்றும் அந்தக் கோட்பாடு காரணமாக பல துறைகளும் வேகமாக முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக இந்து அறநிலையத் துறையைப் பொறுத்தவரை இரண்டாண்டு காலத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டு இருக்கின்றன.
மொத்தம் 1,000 இந்து கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு இருக்கிறது.
1,000ஆவது குடமுழுக்காக சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விசுவநாதர் கோயிலில் திருப்பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மங்கலகரமான முறையில் நடந்து முடிந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ள முதல்வர், இந்தச் சாதனைகளை நிகழ்த்தி இருக்கும் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அலுவலர்களையும் தான் பெரிதும் பாராட்டுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.