சென்னை: தமிழ் நாடு அரசு இணைய சூதாட்டங்களுக்குத் தடைவிதித்து கொண்டு வந்துள்ள சட்டம் செல்லுபடியாகும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசு நிறைவேற்றிய இணைய சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக அரசை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
“இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் செல்லுபடியாகக் கூடியது. பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
“இந்தச் சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இணைய விளையாட்டுக்கள் காரணமாக வேலையில்லாத இளைஞர்கள், தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், காவல்துறையைச் சேர்ந்தோர் என 32 பேர் உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது,” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், திறமையை வெளிப்படுத்தும் இணைய விளையாட்டுகளான ரம்மி, போக்கர் விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகளை நீக்கம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேநேரம், திறமைக்கான இணைய விளையாட்டுகளான ரம்மி போன்றவற்றை விளையாடுவதற்கான நேரம், வயது தொடர்பாக அரசு, விதிகளை உருவாக்கிக்கொள்ள அனுமதியளிப்பதாகத் தெரிவித்தனர். அத்துடன் தமிழக அரசின் இணைய சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிராக இணைய விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தனர்.