சென்னை: மத்திய அரசின் நிதிப்பகிர்வில் தங்கள் மாநிலத்திற்குப் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக அனைத்து மாநிலங்களுமே போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்குக் காரணமான மத்திய பாஜக அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் காணொளி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
நிதி ஒதுக்கீடு செய்வதில் தங்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
இதையடுத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அம்மாநிலங்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன.
மத்திய அரசைக் கண்டித்து கர்நாடக அரசு போராட்டம் நடத்தி முடித்துள்ள நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அம்மாநில அமைச்சரவையும் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டது.
இதற்கு திமுகவின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று பங்கேற்றார். இதையடுத்து போராட்டத்தினூடே முதல்வர் ஸ்டாலின் காணொளி வசதி மூலம் உரையாற்றினார்.
அப்போது, மாநிலங்களை மதிக்கிற, மாநில மக்களையும் மதிக்கின்றவர்களாக முந்தைய பிரதமர்கள் இருந்தனர் என்றும் இப்போதோ மாநிலங்கள் இருப்பதோ, மாநிலங்களுக்கு முதல்வர்கள் இருப்பதோ பிரதமர் மோடிக்குப் பிடிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மோடி பிரதமர் ஆனதும் செய்த முதல் செயல், மாநிலங்களின் உரிமையைப் பறித்ததுதான். நிதி, கல்வி, மொழிக்கான உரிமைகளைப் பறித்தார். மேலும், சட்ட உரிமையையும் பறித்தார்.
“மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பது உயிர்வாயுவை நிறுத்துவதற்குச் சமம். அதைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது.
“இது ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று பாஜக முதல்வர்கள் நினைக்க வேண்டாம். நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்,” என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
பாஜக அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உறுதியோடு போராடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதே காரணங்களுக்காகத்தான் கேரள முதல்வர் பினராயி விஜயனும் போராடி வருவதாகத் தெரிவித்தார்.