சென்னை: மழைக்காலம் முடிந்து மீண்டும் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் வேளையில் கொசுக்களின் உற்பத்தியும் பெருகி உள்ளது. பருவ காலம் தற்போது மாறி வரும் நிலையில் சென்னையில் கொசுக்கடி பாதிப்பும் பெருகியுள்ளது.
பனியும் குளிரும் குறைந்து வெப்பம் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இனி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் என்பதால் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளது.
கொசுக்கள் உற்பத்தியாகும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டால் சென்னை மக்களை கொசுக்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம் என்ற அடிப்படையில் இந்தப் பணியை இந்த மாதம் இறுதியில் தொடங்க அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
சென்னையில் 248 கி.மீ. தூரத்திற்கு நீர்வழிப் பாதைகள் உள்ளன. இவற்றில் ட்ரோன் எனும் ஆளில்லா வானூர்தி மூலம் கொசு மருந்து அடித்து கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர சிறிய கால்வாய்களிலும் கொசுக்களின் பெருக்கம் தடுக்கப்பட உள்ளது. 6 ட்ரோன்கள் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் கொசு மருந்து அடித்து கொசுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர், “மிச்சாங் புயல், மழையால் கொசு ஒழிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மாதம் இறுதியில் மீண்டும் கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. நீர்நிலைகளில் படகுகளில் சென்று குப்பைகளை அகற்றுதல் இடம்பெறும். சென்னையில் ஓடும் முக்கிய 3 நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க முழுவீச்சில் பணி மேற்கொள்ளப்படும்,” என்றார்.