நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் முதுமலைக் காட்டில் தீப்பற்றியதால் கிட்டத்தட்ட 100 ஏக்கர் காட்டில் உள்ள உள்ள மரங்கள், புல்வெளிகள் எரிந்து சாம்பலாகியதாகக் கூறப்படுகிறது.
காட்டுத்தீ பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததை அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எழுபதுக்கும் மேற்பட்ட காட்டுவளத் துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
இதேபோல் பெந்தட்டி காட்டுப் பகுதியில் தீ பற்றியது. அங்கு ஏற்பட்ட காட்டுத்தீ முதுமலை மசினகுடி வனக்கோட்டம், சிங்காரா வனச்சரகம், ஆணிக்கல் கோவில் அருகே கல்லஸ்கொம்பை வனப்பகுதிக்கு பரவி அங்கு தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. 60க்கும் அதிகமான வனத்துறையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.