சீனாவில் கொவிட்-19 பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அந்நாட்டின் பல்வேறு நகரங்களிலும்
மாநிலங்களிலும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மளமளவென ஏற்றம் கண்டு வருகிறது. சீனாவில் கொவிட்-19 பாதிப்பு அடுத்த மாதம் உச்சத்தை எட்டும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் வூஹான் நகரில் கொவிட்-19 தலைதூக்கியது. அதன் பிறகு தற்போது அங்கு ஆக மோசமான கொவிட்-19 நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை இனி வெளியிடப்போவதில்லை என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் நேற்று அறிவித்தது. கொவிட்-19 கிருமிப் பரவலால் சீனாவில் ஏற்பட்டுள்ள உண்மைநிலவரத்தை அந்த ஆணையம் இதுவரை குறைத்துக்காட்டியதாக நம்பப்படுகிறது.
கடந்த மாதம் வரை கொவிட்-19 அறவே இல்லாத நிலையை எட்ட சீனா இலக்கு கொண்டிருந்தது. ஆனால் இம்மாத தொடக்கத்திலிருந்து அது கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, சீனாவில் கொவிட்-19 கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
இவ்வளவு காலம் கடுமையான கட்டுப்பாடுகள், முடக்கநிலைகளை நடைமுறைப்படுத்தியதாலும் சீனாவில் பலர் இன்னும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாததாலும் அந்நோய்க்கு எதிராக அந்நாட்டு மக்களுக்குப் போதுமான எதிர்ப்பு சக்தி இல்லை என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
முதலில் தலைநகர் பெய்ஜிங்கில் பெருமளவிலான பாதிப்பு ஏற்பட்டது. பிறகு நாட்டின் மற்ற பகுதிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகை சீனாவெங்கும் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள உற்பத்தி, தொழில்நுட்ப மையமான சேஜியாங் மாநிலத்தில் நாள்தோறும் ஏறத்தாழ ஒரு மில்லியன் பேருக்குக் கிருமித்தொற்று ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
அடுத்த இரண்டு வாரங்களில் இந்த எண்ணிக்கை இருமடங்கு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அதன் பிறகு நிலைமை சீரடையும் என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவில் கடந்த வாரம் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 37 மில்லியன் பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் கூறியது. ஆனால் உண்மை நிலவரம் இதைவிட மோசமாக இருக்கக்கூடும் என்று மற்ற நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை நிபுணர்கள் நம்புகின்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இடமில்லை
சீனாவில் உள்ள மருத்துவ மனைகளில் படுக்கைப் பற்றாக்குறை நிலவுவதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அறவே இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவசரநிலைப் பிரிவுகளிலும் காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் மருந்தகங்களிலும் மற்ற வார்டுகளிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற மருத்துவ நெருக்கடிநிலையைப் பார்த்ததில்லை என்று பெய்ஜிங்கில் பணிபுரியும் டாக்டர் ஹாவர்ட் பெர்ன்ஸ்டைன் கூறினார்.
மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகளில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்றும் அவர்களில் பலரிடம் கொவிட்-19, நிமோனியா ஆகியவற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அலைமோதும் நோயாளிக் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் மருத்துவர்கள் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக டாக்டர் பெர்ன்ஸ்டைன் கூறினார்.
மரண எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பெய்ஜிங்கில் உள்ள தகனச் சாலைகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள ராஃபிள்ஸ் மருத்துவமனை போன்ற தனியார் மருத்துவமனைகளிடமிருந்து ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள பேக்ஸ்லோவிட் மருந்தை வாங்க சீனாவில் உள்ள பலர் விரும்புவதாகவும் ஆனால் அந்த மருந்து போதுமான அளவில் இல்லை என்றும் ராஃபிள்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் சோனியா ஜுடார்ட் பொரியோ தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் காட்டிலும் மருந்து உட்கொள்ள சீனாவில் பலர் விரும்பு வதாக அவர் தெரிவித்தார். ஆனால் மருந்து தடுப்பூசிக்கு நிகராகாது என்றார் அவர். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக சீனாவில் பணிபுரிந்து வரும் டாக்டர் ஜுடார்ட் பொரியோ, சீனாவில் நிலைமை மோசமடையும் என்று அச்சம் தெரிவித்தார்.