சமூக மருத்துவமனைக்கு மாற்றப்படும் அளவுக்கு உடல்நலம் தேறிய பங்ளாதேஷ் ஊழியர்; நன்றி தெரிவித்த காணொளி பதிவேற்றம்

சமூக மருத்துவமனைக்கு மாற்றப்படும் அளவுக்கு உடல்நலம் தேறிய பங்ளாதேஷ் ஊழியர்; நன்றி தெரிவித்த காணொளி பதிவேற்றம்

2 mins read
6c8e7be3-9b27-40e1-8606-3809044e8495
மூன்று மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையில், குறிப்பாக, இரண்டு மாதங்கள் வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிகிச்சை பெற்ற, கொவிட்-19 பாதிப்புக்குள்ளான பங்ளாதேஷ் ஊழியர், தற்போது குணமடைந்து சமூக மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கு ஏற்ற நிலைக்கு முன்னேறியிருக்கிறார். படம்: MIGRANT WORKERS' CENTRE/FACEBOOK -

மூன்று மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையில், குறிப்பாக, இரண்டு மாதங்கள் வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிகிச்சை பெற்ற, கொவிட்-19 பாதிப்புக்குள்ளான பங்ளாதேஷ் ஊழியர், தற்போது குணமடைந்து சமூக மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கு ஏற்ற நிலைக்கு முன்னேறியிருக்கிறார்.

சமூக மருத்துவமனையில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான மறுவாழ்வு பராமரிப்புகளில் கவனம் செலுத்தப்படும்.

(காணொளியை முழுமையாகக் காண 'முழுத்திரையை'த் தெரிவு செய்யவும்.)

சிங்கப்பூரின் 42வது கொவிட்-19 சம்பவம் என்று பரவலாக அறியப்படும் 39 வயதான திரு ராஜு சர்க்கார், தாம் மருத்துவமனையில் இருந்தபோது தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் காணொளியை வெளிநாட்டு ஊழியர் நிலையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று (மே 21) பதிவேற்றியது.

"சிங்கப்பூர் அரசாங்கம், எனக்காக பிரார்த்தனை செய்தவர்கள், என்னுடைய நிறுவனம், எனது குடுமத்த்துக்கு ஆதரவளித்த வெளிநாட்டு ஊழியர் நிலையம் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்," என்று காணொளியில் குறிப்பிட்டார்.

மருத்துவமனைப் படுக்கையில் சிவப்பு வண்ண தொப்பியுடன் காணப்பட்ட அவர், அயராது பாடுபட்டு தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், தாதியர் ஆகியோருக்கும், தனது சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொண்டதற்காக அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்தார்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட திரு ராஜு தேசிய தொற்று நோய்கள் நிலையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 2 மாதங்கள் இருந்தார். மயக்க நிலையில் வைக்கப்பட்ட அவர் சுவாசிக்க செயற்கை சுவாசக் கிருமி பயன்படுத்தப்பட்டது.

மார்ச் மாதத்திலேயே கொவிட்-19 தாக்கத்திலிருந்து விடுபட்ட அவர், ஏப்ரல் மாத மத்தியில் டான் டோக் செங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பதிவேற்றப்பட்டிருந்த ஒன்றரை நிமிட காணொளியில், சக வெளிநாட்டு ஊழியர்கள் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடித்து கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரில் விடுதிகளில் தங்கியிருக்கும் சுமார் 30,000 வெளிநாட்டு ஊழியர்கள் கிருமித்தொற்று கண்டுள்ளனர்.

"எனக்கு கிருமித்தொற்று ஏற்பட்டபோது அரசாங்கம் எனக்கு ஆதரவாக இருந்தது போல, உங்களுக்கு உடல்நலமில்லாமல்போனாலும் அரசாங்கம் உதவும். நீங்கள் விதிமுறைகளைப் பின்பற்றினால், பயப்படத் தேவையில்லை, அரசாங்கம் உங்களுக்கு உதவியாக இருக்கும்," என்றும் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்