இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஏப்ரல் 8) தமிழ்நாடு தலைநகரம் சென்னைக்குப் பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு நலத்திட்டங்களை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.
சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 5.15 மணி அளவில் திரு மோடி ஹைதராபாத்திலிருந்து சென்னை சென்றடைந்தார்.
பிரதமர் மோடியைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பிரதமரை நேரில் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்துப் பார்வையிட்டார்.
அதையடுத்து, ஹெலிகாப்டரில் நேப்பியர் பாலம் அருகில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். வளாகத்துக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக சென்னை மத்திய ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டார்.
சென்னை மத்திய ரயில் நிலையத்தை அடைந்த பிரதமர் மோடி, சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
‘வந்தே பாரத்’ விரைவு ரயிலுக்குள் சென்று பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் பார்வையிட்டனர்.
பிறகு விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
விவேகானந்தரின் கொள்கைகளை நிறைவேற்ற இந்தியா பாடுபடுவதாக அவர் தெரிவித்தார்.