மேற்கு வங்காள தலைநகர் கோல்கத்தாவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரு பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதையடுத்து கடந்த 11ம் தேதி முதல் மருத்துவர்கள் அந்த மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மருத்துவர்களுக்குத் தக்க பாதுகாப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்காள மருத்துவர்களுக்கு ஆதரவாக இந்திய மருத்துவ சங்கம் ஏற்பாட்டில் இந்தியா முழுவதும் கடந்த 14ம் தேதி முதல் மூன்று நாட்கள் போராட்டங்கள் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் இன்று வேலைநிறுத்தம் நடத்தவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
கோல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10ம் தேதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் இரண்டு பயிற்சி மருத்துவர்களைத் தாக்கினர்.
இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய வேலை நிறுத்தம் நாளை காலை 6 மணி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.
மருத்துவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் ஏழாவது நாளாக நீடித்துவரும் போராட்டத்தாலும் நாடு முழுவதும் நடைபெற்றுவரும் வேலைநிறுத்தத்தாலும் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.