சிங்கப்பூரின் காற்றுத்தரம் கடந்த சில நாட்களில் இருந்ததுபோல் தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் அது மேலும் மோசமாகி சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
புகைமூட்டம் மோசமாகி வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள அதிகாரிகள் பொதுமக்களுக்கு ஆலோசனை விடுத்துள்ளனர்.
காற்றுத்தரக் குறியீடு (பிஎஸ்ஐ) அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான அளவில் இருக்கும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. ஆயினும், இந்தோனீசியாவில் புகைமூட்டம் பெருகி அந்தப் புகையைக் காற்று சிங்கப்பூருக்குத் தள்ளினால் இங்குள்ள புகைமூட்டம் மோசமாகலாம்.
தற்போது 51க்கும் 100க்கும் இடைப்பட்டிருக்கும் காற்றுத்தரக் குறியீடு மிதமான அளவில் இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கான 24 மணி நேர பிஎஸ்ஐ இந்த அளவில் இருந்து வந்துள்ளது.
101க்கும் 200க்கும் இடைப்பட்டுள்ள பிஎஸ்ஐ, சுகாதாரத்திற்குக் கெடுதலை விளைவிக்கக்கூடிய காற்றுத்தரத்தைப் பிரதிபலிக்கிறது. சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் இவ்வாரம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மூன்று மணிக்குப் பதிவு செய்யப்பட்ட பிஎஸ்ஐ 99ஆக இருந்தது.