பிரதமர் லீ சியன் லூங்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் முக்கியத்துவம் வாய்ந்த தற்காப்பு உடன்பாட்டைப் புதுப்பித்துள்ளனர். சிங்கப்பூரின் ஆகாயப் படை, கடற்படை தளங்களை அமெரிக்கப் படைகள் 2035ஆம் ஆண்டு வரை கூடுதலாக 15 ஆண்டுகள் பயன்
படுத்திக்கொள்ள அந்த உடன்பாடு அனுமதிக்கும்.
சிங்கப்பூரின் தளங்களை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்வதன் தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட 1990 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யப்பட்ட உடன்பாட்டில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை அப்போது அவ்விருவரும் பாராட்டிப் புகழ்ந்தனர்.
திருத்தப்பட்ட உடன்பாட்டில் கையெழுத்திடும் முன்னர் இண்டர்நேஷனல் நியூயார்க் பார்க்லே ஹோட்டலில் செய்தியாளர்களிடம் பிரதமர் லீ பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தற்காப்பு அம்சங்களில் நிலவும் மிகச் சிறந்த ஒத்துழைப்பை உடன்பாடு பிரதி
பலிக்கிறது.
“இது தவிர, பாதுகாப்பின் இதரப் பிரிவுகள், பொருளியல், பயங்கரவாத முறியடிப்பு, கலாசாரம், கல்வி போன்றவற்றிலும் விரிவான ஒத்துழைப்பு ஆகியனவும் உடன்பாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
“எனவே எங்களது உறவை எண்ணி மகிழ்கிறோம். இந்த உறவு மேன்மேலும் வளரும் என்று கருதுகிறோம். தென்கிழக்கு ஆசிய வட்டாரத்திலும் ஆசிய பசிபிக் வட்டாரத்திலும் அமெரிக்காவின் ஈடுபாடு ஆழமாக இருப்பதையும் இந்த உறவு புலப்படுத்தும்;” என்றார்.
அமெரிக்காவின் பாதுகாப்புப் படை இந்த வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நிலைகொண்டு இருப்பதற்காக இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் 1990ல் உருவானது.
அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூவும் அமெரிக்க துணை அதிபர் டேன் கீலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆகக் கடைசியாக 2005ஆம் ஆண்டில் அது புதுப்பிக்கப்பட்டது.
அதனை நேற்று முன்தினம் திரு லீ குறிப்பிட்டார்.
“இதற்கு முன்னர் கடந்த 2005ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தோம். அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதன் அம்சங்களை நீட்டிக்கும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பிப்பதில் நாங்கள் பெருமகிழ்வுகொள்கிறோம்,” என்றார் அவர்.
அமெரிக்கப் படைகள் சிங்கப்பூரின் ஆகாய, கடற்படைத் தளங்களை அணுகவும் இங்கு வந்து செல்லும் அதன் படைவீரர்கள், விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றுக்குத் தளவாட உதவிகளை வழங்கவும் ஒப்பந்தம் வகை செய்யும்.
அதன் அடிப்படையில் பயிற்சிக்காகவும் எண்ணெய் நிரப்பவும் பராமரிக்கவும் போர் விமானங்களை சுற்று முறையில் அமெரிக்கா இங்கு நிறுத்திக்கொள்ளலாம்.
அதன்படி கடலோர போர்க்கப்பல்களை கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூருக்கு அமெரிக்கா அனுப்பி வருகிறது.
அதேபோல பி-8 போசைடன் விமானத்தை 2015ஆம் ஆண்டு முதல் இங்கு நிறுத்தி வருகிறது.
உடன்பாடு புதுப்பிக்கப்பட்டது குறித்து சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“ஆசிய பசிபிக் வட்டாரத்தின் அமைதி, வளப்பம், நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் ஈடுபாடு அவசியம் என்ற நிலை நீடிப்பதால் உடன்பாடு புதுப்பிப்பு அமெரிக்காவுக்கான ஆதரவை மேலும் வலியுறுத்துகிறது,” என்று அந்த அறிக்கை சுட்டியது.
ஐநா–வின் 74வது பொதுச்
சபைக் கூட்–டத்–தில் பங்–கேற்–ப–தற்–காக பிர–த–மர் லீ அமெ–ரிக்கா சென்–றுள்–ளார். தற்–காப்பு அமைச்–சர் இங் எங் ஹென்–னும் அவ–ரு–டன் பய–ண–மா–னார்.