சூரிய சக்தி, எரிசக்தி சேமிப்பு போன்ற எரிசக்தி வளங்களால் உருவாக்கப்படும் மின்சாரம் விரைவிலேயே ஒற்றை மின் நிலையம்போல ஒருங்கிணையும் சாத்தியம் உள்ளது.
இதன்மூலம் மெய்நிகர் மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் சாத்தியம் ஏற்படும் என்றும் அவ்வாறு உருவாக்கப்படும்போது மின் பகிர்வில் விரிவான நீக்குப்போக்கு இருக்கும் என்றும் எரி
சக்தி சந்தை ஆணையமும் செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இணைந்து தெரிவித்துள்ளன.
மேலும் சூரியசக்தி போன்ற சுத்தமான எரிசக்தி வளங்கள் சிங்கப்பூரின் எரிசக்திக் கலவையில் ஒருங்கிணையும் வாய்ப்பு ஏற்படும்.
சிங்கப்பூரின் முதல் மெய்நிகர் மின் உற்பத்தி நிலையத்தை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) இவ்விரு அமைப்புகளும் இணைந்து உருவாக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
2022ஆம் ஆண்டுவாக்கில் இதனை முடிக்க இலக்கு வகுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் எரிசக்தி ஆராய்ச்சி கல்விக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கோ லியாங் மோங் தலைமையில் இதற்கான திட்டம் இயங்கும்.
சிங்கப்பூரின் எரிசக்தித் துறையில் புதிய ஆற்றல்களை உருவாக்க எரிசக்தி சந்தை ஆணையமும் செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீசும் கடந்த ஆண்டு தங்களுக்கு இடையிலான பங்காளித்துவத்தைப் புதுப்பித்தன.
புதிய திட்டத்துக்காக அவை இரண்டுக்கும் நேற்று முன்தினம் $10 மில்லியன் மானியம் வழங்கப்பட்டது. பங்காளித்துவத்தின் ஒரு பகுதி இந்த மானியம்.
சூரிய சக்தி தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டு விநியோகிக்கப்படுவதன் காரணமாக எரிசக்தி விநியோகிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு புதிய மெய்நிகர் மின் உற்பத்தியால் தானாக சரிசெய்யப்படும் என்று இரு அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
“மாறிவரும் எரிசக்தி சூழலில் நமது பொருளியல் வளர்ச்சியை ஆதரிக்கும், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தீர்வுகளுக்கான அவசியம் தேவைப்படுகிறது,” என்று எரிசக்தி சந்தை ஆணையத்தின் தலைமை நிர்வாகி நியாம் ஷி சுன் கூறினார்.