சிங்கப்பூரில் வூஹான் கிருமி தொற்றுக்கு மேலும் இருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை ஏழுக்கு உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது.
மற்ற ஐவரைப் போல் புதிய நோயாளிகள் இருவருமே சீனாவின் ஹுபெய் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் 56 வயது சீன ஆடவர். ஜனவரி 19ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்திருந்த அவருக்கு ஜனவரி 25ஆம் தேதி இருமல் ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜனவரி 27ஆம் தேதி அவருக்கு இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கு முன்னர் அவர் பாசிர் ரிஸ் குரோவில் தமது குடும்ப உறுப்பினர்களுடன் தங்கியிருந்தார்.
இரண்டாமவர், வூஹானைச் சேர்ந்த 35 வயது சீன ஆடவர். ஜனவரி 23 ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்திருந்த அவர், மரினா பே சேண்ட்சிஸ் தங்கியிருந்தார். ஜனவரி 24ஆம் தேதியன்று இந்நோய்க்கான அறிகுறிகள் அவரிடத்தில் தென்பட்டதை அடுத்து அந்த ஆடவர் ராஃபிள்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தேசிய தொற்றுநோய் நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேருக்கு இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து , சிங்கப்பூரில் ஹுபெய் மாநிலத்தைச் சேர்ந்த சீனர்களிடையே இந்நோய்த்தொற்று, உலகளாவிய நோய்த்தொற்றின் திடீர் அதிகரிப்புடன் ஒத்துப்போகும் விதமாகக் கூடியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூருக்குள்ளேயே இந்நோய்த் தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இதுவரை தென்படவில்லை என்றாலும் இது சிங்கப்பூருக்கு ஆபத்தை விளைவித்துள்ளது. புதிய சம்பவங்கள் குறித்து இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டத்தினர் முன்னிலையில் அறிவித்திருந்த சுகாதார அமைச்சு, புதிய பயணக் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.
அண்மையில் ஹுபெயிலிலுருந்து சிங்கப்பூருக்கு வந்துள்ள பயணிகள், ஹுபெய்க்கு ஏற்கெனவே சென்று வந்த அல்லது ஹுபெயில் சீனக் கடப்பிதழ்கள் கொடுக்கப்பட்ட சிங்கப்பூர் வாசிகள் அல்லது இங்கு நீண்ட கால அனுமதி அட்டையைக் கொண்டுள்ளவர்கள், ஹுபெய்க்கு ஏற்கெனவே சென்றுள்ள அல்லது ஹுபெய்யில் சீனக் கடப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ள புதிய வருகையாளர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கு இந்தப் புதிய கட்டுப்பாடுகள் பொருந்தும் என்றனர் அதிகாரிகள்.