கொரோனா கிருமி சிங்கப்பூரிலும் பரவியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட நான்கு பெண்கள் கொரோனா கிருமித் தொற்றின் மையமாக இருக்கும் வூஹான் நகருக்குச் செல்லாதவர்கள்.
அவர்களில் இருவர் லெவெண்டர் ஸ்திரீட்டில் உள்ள கெவன் சாலையில் அமைந்துள்ள யோங் தாய் ஹாங் எனும் சீனப் பாரம்பரிய மருந்துக்கடையில் வேலை செய்பவர்கள்.
அந்த மருந்துக்கடைக்குப் பெரும்பாலும் சீன சுற்றுப்பயணிகள் செல்வது வழக்கம்.
பாதிக்கப்பட்ட அந்த இரு பெண்களில் ஒருவருடைய பணிப்பெண்ணுக்கு கொரோனா கிருமி தொற்றிக்கொண்டது.
அந்த மருந்துக்கடைக்கு சீன சுற்றுப்பயணிகளை அழைத்துச் சென்ற சுற்றுப்பயண வழிகாட்டி ஒருவருக்கும் கிருமி தொற்றிக்கொண்டது.
சம்பந்தப்பட்ட சீன சுற்றுப்பயணிகள் சீனா திரும்பிவிட்டனர்.
இந்நிலையில், மேலும் இருவருக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமையன்று வூஹான் நகரிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த 92 பேரில் அந்த இருவரும் அடங்குவர்.
அதே விமானத்தில் பயணம் செய்த மேலும் இருவருக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை சிங்கப்பூரில் மொத்தம் 24 பேர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய கிருமித் தொற்று சம்பவங்கள் குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
“சமூக அளவில் கிருமி பரவுவதற்கான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், எங்களது கடின உழைப்பையும் கிருமித் தொற்றைத் தடுக்க எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் மீறி சமூக அளவில் கொரோனா கிருமி பரவும் சாத்தியம் உள்ளது,” என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சமூக அளவில் கிருமி பரவினால் மக்களிடையே தொடர்புகளைக் குறைக்க சிங்கப்பூர் கூடுதல் நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒன்றுகூடல்களை ரத்து செய்வது, பள்ளிகளைத் தற்காலிகமாக மூடுவது போன்ற நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படக்கூடும்.
இத்தகைய சூழ்நிலைக்கு சிங்கப்பூர் தயாராகி வந்துள்ளதாகவும் கிருமி சமூக அளவில் பரவாமல் இருக்க இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதால் சிங்கப்பூரில் குறிப்பிட்ட சிலரிடையே கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கும் விஷயம் வெளிச்சத்துக்கு வரக்கூடும் என்றார் அமைச்சர் கான்.
நிலைமைக்கு ஏற்ப கிருமித் தொற்றைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.