கொரோனா கிருமி பரவி வரும் இந்தக் காலகட்டத்தில், தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் விதமாக முதியவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் கோவில்களுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம் என இந்து அறக்கட்டளை வாரியம் அறிவுரை கூறியிருக்கிறது.
கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சமய அமைப்புகளும் அதற்கு ஒத்துழைத்து வருகின்றன.
அந்த வகையில், கோவில்களுக்கும் பக்தர்களுக்கும் இந்து அறக்கட்டளை வாரியம் ஃபேஸ்புக் வாயிலாக பல்வேறு ஆலோசனைகளைப் பரிந்துரைத்துள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் பிற அரசாங்க அமைப்புகளின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் அந்தப் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
கோவில்களுக்கு வருவோரின் உடல் வெப்பநிலையைச் சோதிக்கும்படியும் எவரேனும் உடல்நலம் குன்றியிருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்க்கும்படி அவரை அறிவுறுத்தும்படியும் ஆலய நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், அத்தகையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண ஏதுவாக அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பக்தர்களின் பெயர்களையும் தொலைபேசி எண்களையும் பதிவுசெய்யலாம்.
பஜனைகள், சமய வகுப்புகள், சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகளை ஒத்திவைக்கும்படி ஆலயங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ஆயினும் சிறிய அளவில், அதாவது 250க்கும் குறைவான பக்தர்கள் பங்கேற்பதாக இருந்தால் அவற்றை நடத்தலாம். அதே நேரத்தில், பங்கேற்பாளர்கள் அருகருகே அமராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் பிறந்தநாள், காதுகுத்து, வளைகாப்பு போன்ற நிகழ்வுகளை ஆலயங்களில் தொடர்ந்து நடத்தலாம்.
பக்தர்கள் ஒன்றுகூடாமல் வீட்டிலேயே இருந்து அவற்றைக் காணும்போது கிருமி தொற்ற வாய்ப்பில்லை என்பதால் முக்கிய விழாக்கள், வழிபாடுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆலயங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
இறைவனை வழிபட்டதும் பக்தர்கள் ஆலயத்தைவிட்டு வெளியேறும்படி அவ்வப்போது அறிவிப்புகள் இடம்பெறவேண்டும்.
பக்தர்கள் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யலாம். ஆலயத்திலேயே வழங்குவதாக இருந்தால் பக்தர்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
திருநீறு, சந்தனம், குங்குமம், தீர்த்தம், மலர் பிரசாதம் போன்றவற்றைக் கரண்டிகளால் வழங்க அறிவுறுத்தப்படுகிறது. அதிக பக்தர்கள் திரளும் நிதி திரட்டு நடவடிக்கைகளை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆலயங்களில் திருமண விழாக்களை நடத்த ஏற்கெனவே திட்டமிடிருந்தால் விருந்தினரின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளும்படியும் அவர்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமர்வதை உறுதிசெய்யுமாறும் குடும்பங்களுக்கு வாரியம் ஆலோசனை வழங்கியுள்ளது.
வெப்பமானிகள், கிருமிநாசினிகள், சவர்க்காரம் உள்ளிட்ட தூய்மையாக்கும் பொருட்கள் போன்றவற்றை ஆலயங்களுக்கு வழங்கி இருப்பதாக வாரியம் தெரிவித்தது.
#சிங்கப்பூர் #ஆலயங்கள்