மலேசிய ஊழியர்களை சிங்கப்பூரில் தங்க வைக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் ஆலோசனை

மலேசிய ஊழியர்களை சிங்கப்பூரில் தங்க வைக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் ஆலோசனை

2 mins read
8d042f33-def0-4e29-8d55-5de696a1199d
கிட்டத்தட்ட 100,000 மலேசியர்கள் சிங்கப்பூரில் வசிப்பதற்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்று கணிக்கப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலேசியா அறிவித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், மலேசியாவைச் சேர்ந்த தங்களது ஊழியர்களை சிங்கப்பூரில் உடனடியாகத் தங்க வைப்பதற்கு, நிதி ஆதரவு வழங்குவது குறித்து சிங்கப்பூர் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

அத்தகையோர் தங்குவதற்கு ஹோட்டல்கள், ஊழியர் தங்குவிடுதி ஆகியவற்றை நடத்துபவர்கள் குறைவான வாடகைக்கு தங்க இடமளிப்பதன் தொடர்பிலும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

"மக்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் சேவைகள் வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே நமது நோக்கம்," என்று மனிதவள அமைச்சு இன்று (மார்ச் 17) குறிப்பிட்டது.

நாளை முதல் இம்மாத இறுதி வரை மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் என நேற்றிரவு மலேசியா அறிவித்தது.

இந்த ஆணையில் மலேசியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் சுற்றுப்பயணிகள், வெளிநாட்டுப் பயணிகள் மலேசியாவுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு மலேசியாவுக்கும் இடையிலான நில சோதனைச்சாவடிகள் வழியாக தினமும் சுமார் 415,000 பயணிகள் சென்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரில் பணி புரியும் மலேசியர்கள்.

கிட்டத்தட்ட 100,000 மலேசியர்கள் சிங்கப்பூரில் வசிப்பதற்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்று கணிக்கப்படுகிறது.

அத்தகையோர் தங்களது உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் போன்றோருடன் சேர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருக்க நிறுவனங்கள் ஊக்குவிக்கலாம். சில ஊழியர்களுக்கு இது மிகவும் இணக்கமுடைய தெரிவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

அத்தகைய ஏற்பாடுகளைச் செய்துகொள்ள முடிவ்யாதவர்கள் ஹோட்டல்கள், ஊழியர் தங்குவிடுதிகள், வீடமைப்புக் கழக வீடுகளின் அறைகள், வீடுகள், தனியார் குடியிருப்புகள் போன்றவற்றில் தங்க வைக்கப்படலாம்.

நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மனிதவளத்தைப் பற்றி கவனமாக ஆராய்ந்து, அவர்களது ஊழியர்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்க வேண்டிய தேவையைப் பொறுத்து உகந்த முடிவை எடுக்க வேண்டும் என மனிதவள அமைச்சு கூறியுள்ளது.

ஆதரவு வழங்குவதில், சுகாதாரம், பாதுகாப்பு, துப்புரவு, குப்பை நிர்வாகம், வளங்கள் நிர்வாகம், தளவாடங்கள், போக்குவரத்து போன்ற அத்தியாவசியச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றது அமைச்சு.

#சிங்கப்பூர் # மலேசிய ஊழியர் #கொரோனா

குறிப்புச் சொற்கள்