இவ்வாண்டு சித்திரைப் புத்தாண்டு ஆர்ப்பாட்டமின்றி, அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது.
வீட்டுச் சூழலில் குடும்பங்களும் தங்கும்விடுதிகளில் வெளிநாட்டு ஊழியர்களும் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிங்கப்பூரில் ஒரு மாதக் காலத்திற்கு நடப்பில் இருக்கும் கிருமித் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டிருக்கும் அதே சமயத்தில், பொதுமக்களுடன் வெளிநாட்டு ஊழியர்களும் தங்கள் பங்கை ஆற்றி வருகின்றனர்.
சிங்கப்பூரின் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் பதிவாகி வரும் எண்ணிக்கை அண்மையில் அதிகமாகவே இருந்து வருகிறது.
தற்போது குறைந்தது 15 தங்கும்விடுதிகளில் கிருமித்தொற்று குழுமங்கள் உள்ளன.
சிங்கப்பூரில் 43 தங்கும்விடுதிகள் உள்ளன. அவற்றில் மொத்தமாக 200,000 பேர் தங்குவதற்கான வசதிகள் உண்டு.
இதனால் அவ்விடங்களில் கிருமிப் பரவலைத் தடுக்க அரசாங்கம் மும்முனை உத்தியைக் கையாள்வதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று முன்தினம் தெரிவித்தார்.
கிருமித்தொற்று குழுமங்கள் கண்டறியப்படும் தங்கும்விடுதிகள் முதலில் முடக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆட்களில் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது.
முடிந்தவரை ஊழியர்கள் தங்களின் அறைகளில் இருப்பது, பிறருடன் கலந்துறவாடலைக் குறைப்பது, கூட்டாக சமையல் செய்வதைத் தவிர்க்க வெளியிலிருந்து உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்படுவது, அனைவரும் பயன்படுத்தும் குளியலறை வசதியில் குளிப்பதற்கான நேரத்தை வகுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிருமித்தொற்று குழுமங்கள் இன்னமும் உருவாகாமல் உள்ள 29 தங்கும்விடுதிகளும் முன்னெச்சரிக்கைக்காக முடக்கநிலையில் உள்ளதாகவும் திருமதி டியோ கூறினார். பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது பொருட்டு இவ்வாறு செய்யப்படுவதாக சொன்னார்.
தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து அத்தியாவசிய சேவையில் உள்ள ஊழியர்களை வெளியேற்றுவதும் ஓர் உத்தி எனக் கூறப்பட்டது.
இதனால் காலியாகும் இடத்தில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்தித் தரலாம் என்று அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.
ஆனால் அவ்வாறு வெளியேற்றப்படும் சுமார் 7,000 ஊழியர்கள், முதலில் கொவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ராணுவ முகாம்கள், மிதக்கும் விடுதிகள், விளையாட்டு மண்டபங்கள், காலியான வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகள் போன்ற 18 வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்படுவர்.
கொவிட்-19 அமைச்சுகள்நிலை பணிக்குழு நடத்திய செய்தியாளர் கூட்டத்தின்போது பேசியிருந்த திருமதி டியோ, தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்கள் உடல்நலத்துடன் தொடர்ந்து இருப்பது, கிருமித்தொற்றுக்கு ஆளாகும் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருப்பது ஆகியவற்றுக்கு உடனடி முன்னுரிமை தர வேண்டும் என்றார்.