வெளிநாட்டு ஊழியர்கள், தங்கும் விடுதி நடத்துநர்கள் ஆகியோருக்கு ஆதரவளிக்க, அமைப்புகளுக்கிடையிலான புதிய பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இன்று (ஏப்ரல் 7) மனிதவள அமைச்சு தெரிவித்தது.
கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான புதிய நடவடிக்கைகள் இன்று தொடங்கியுள்ள நிலையில், பல வேலையிடங்களில் வேலை நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய பணிக்குழு அவர்களின் நலவாழ்வை உறுதி செய்வதுடன், கிருமிப்பரவலை முறியடிக்க புதிய நடவடிக்கைகளை தங்கும்விடுதி நடத்துநர்கள் நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைச் சூழலையும் மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
கொரோனா கிருமித்தொற்று காலகட்டத்தில், அதிகமானோர் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் அக்கறக்குரியவையாக விளங்குகின்றன.
பொங்கோலில் இருக்கும் S11, வெஸ்ட்லைட் டோ குவான் தங்கும் விடுதி ஆகிய இரண்டிலும் ஊழியர்களுக்கு கிருமித்தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. அங்குள்ள ஊழியர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.
பொங்கோலில் இருக்கும் S11 தங்கும் விடுதியில் ஆக அதிகமாக 98 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
அதேபோல டோ குவான் ரோடு ஈஸ்டில் இருக்கும் டோ குவான் தங்கும் விடுதியும் ஏப்ரல் 6ஆம் தேதி தனிமைப்படுத்தப்பட்ட வளாகமாக அறிவிக்கப்பட்டது.
தொடக்கத்தில் சில பிரச்சினைகள் இருந்தாலும் தற்போது தங்கும் விடுதிவாசிகளுக்கு உணவு உரிய நேரத்தில் கிடைப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
பொங்கோல் S11 தங்குவிடுதியில் உள்ள 20,000 ஊழியர்கள், வெஸ்ட்லைட் டோ குவான் தங்கும் விடுதியில் உள்ள ஊழியர்கள் ஆகியோர், முகக்கவசங்கள், வெப்பமானிகள், கிருமிநாசினிகள் உள்ளிட்ட பராமரிப்புப் பைகளைப் பெற்றுக்கொண்டனர். டோ குவான் தங்கும் விடுதியில் இருப்போருக்கும் இதே போன்ற பராமரிப்புப் பைகள் வழக்கப்படும்.
பொங்கோலில் இருக்கும் S11, வெஸ்ட்லைட் டோ குவான் தங்கும் விடுதி ஆகியவற்றில் சுத்திகரிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தற்போது ஊழியர்கள் அனைவரும் விடுதியிலேயே இருப்பதால் அவர்கள் கழிவறையைப் பயன்படுத்துவதாலும் மற்ற உபயோகங்களாலும் அங்கு அதிக குப்பை சேர்கிறது.
முந்தைய சில நாட்களைவிட அவ்விரு தங்கும் விடுதிகளிலும் இப்போது துப்புரவு பிரச்சினை மேம்பட்டுள்ளது.
ஊழியர்கள் வெவ்வேறு நேரங்களில் உணவருந்துவது, பொழுதுபோக்கு வசதிகளைப் பயன்படுத்துவது போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடும் வெளிநாட்டு ஊழியர்களை அரசாங்கம் தனியாகத் தங்கவைக்கும்.
சுங்கை காடுட் தங்கும்விடுதி, சுங்கை தெங்கா லாட்ஜ், கொக்ரேன் லாட்ஜ் II, தெம்பனிஸ் தங்கும் விடுதி, கொக்ரேன் லாட்ஜ் I, கிராஞ்சி லாட்ஜ் ஆகியவை தற்போது கிருமித்தொற்று குழுமங்களாகி வருகின்றன.