உலகையே கொரோனா கிருமித்தொற்று அச்சுறுத்தி வரும் இவ்வேளையில், இன்றைய சமுதாயத்தில் மருத்துவர், தாதி, துப்புரவாளார், குப்பை சேகரிப்பவர், உணவுக்கடை நடத்துபவர் போன்றவையே அத்தியாவசியப் பணிகளாகக் கருதப்படுகின்றன.
இருந்தாலும், பலர் அந்த அத்தியாவசியப் பணிகளில் சிலவற்றை மேற்கொள்ளத் தயாராக இல்லை.
மிலியு இன்சைட் ஆய்வு நிறுவனத்தின் மூலம் தி சண்டே டைம்ஸ் மேற்கொண்ட ஆய்வில் 1,000 பேர் பங்கேற்றனர்.
தாங்கள் ஏற்கும் பணியில், தங்களது சமுதாய கௌரவத்துக்கு மக்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற 57 விழுக்காட்டினர், தாங்கள் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்; 42 விழுக்காட்டினர் துப்புரவு பணியை நிராகரித்துள்ளனர்.
இருந்தாலும், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் பற்றிய கண்ணோட்டம், கொவிட்-19 சூழலுக்குப் பிறகு மாறியிருப்பதை இந்த ஆய்வு முடிவு காட்டுகிறது.
ஆய்வில் பங்கேற்ற மூன்றில் இருவர், அந்த கண்ணோட்டம் மேம்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், 17 விழுக்காட்டினர் மட்டுமே தாங்களோ அல்லது தங்களது பிள்ளைகளோ அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஊதியம் முமடங்காக உயர்த்தப்பட்டாலும் கட்டுமானப் பணியாளராகவோ, துப்புரவாளராகவோ அல்லது பாதுகாவல் அதிகாரியாகவோ பணிபுரிய விருப்பமில்லை என ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிப்பேர் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய பணிகளில் பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 37 விழுக்காட்டினர் தங்களுக்குப் பொருத்தமான பணியைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகக் கூறியுள்ள நிலையில், 22 விழுக்காட்டினர் சம்பளத்தை முக்கிய காரணியாகக் குறிப்பிட்டுள்ளனர்.