உள்ளூர்வாசிகளின் ஒத்துழைப்பின்றி சிங்கப்பூரின் பிரபல உணவகங்களும் கடைகளும் வரும் மாதங்களில் செயல்படுவது கடினம். அதற்கென $45 மில்லியன் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. கொள்ளைநோய், பொருளியல் மந்தம், சுற்றுப்பயணிகள் வரத்து குறைவு போன்றவற்றுக்கு மத்தியில் சிங்கப்பூர் தனது பொருளியலை படிப்படியாத் திறந்து வருகிறது. எனவே உள்ளூர் மக்களைக் கவரும் வகையில் பிரசார இயக்கம் நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர், செந்தோசா வளர்ச்சிக் கழகம் ஆகியன இணைந்து நடத்தும் பிரசார இயக்கம் ஒன்பது மாதங்களுக்கு நீடிக்கும். கிட்டத்தட்ட வருடத்தின் பாதியளவு தேவை குறைந்துவிட்ட நிலையில் பயணத்துறை வர்த்தகங்களையும் உள்ளூர் வாழ்க்கைபாணி தொழில்களையும் ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. அதனை நோக்கமாகக் கொண்டு பிரசார இயக்கம் செயல்படும்.
‘சிங்கப்பூர்ரிடிஸ்கவர்ஸ்’ எனப் பெயரிடப்பட்டு உள்ள பிரசார இயக்கம் நேற்று தொடங்கியது. இதனையொட்டி காணொளி வழியாக உரை நிகழ்த்திய வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், கிருமித்தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை சுற்றுப்பயணத் துறை தொடர்ந்து சிரமத்திற்கு ஆளாகும் நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சிங்கப்பூரில் மொத்தமுள்ள 67,000 ஹோட்டல் அறைகளில் பாதிக்கும் மேற்பட்டவை தற்போது கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்து உள்ளது.
தனிமைப்படுத்துதல், தொற்று தடைக்காப்பை நிறைவேற்றுதல், வெளிநாடுகளில் இருந்து திரும்பும் உள்ளூர்வாசிகளுக்கான 14 நாள் கட்டாய இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றுதல் போன்றவற்றுக்காக ஹோட்டல் அறைகள் பயன்படுத்தப்படுவதாக கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெய்த் டான் காணொளி வாயிலாக நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
$45 மில்லியன் மதிப்பிலான உள்நாட்டு சுற்றுப்பயண பிரசார இயக்கத்திற்கான திட்டங்களை செய்தியாளர்களிடம் விவரித்தபோது அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
“கிருமித்தொற்று நோயாளி
களின் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்தால் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் போதுமான ஹோட்டல் அறைகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.
“அதற்கேற்ற வகையில்தான் வழக்கமான தங்குதலுக்கு அறைகள் அனுமதிக்கப்படும்.
“எனவே, ஹோட்டல்கள் மறு
படியும் தங்களது தொழிலைத் தொடங்க அனுமதிப்பது என்பது நிலைமையைப் பொறுத்தது. மறுபடியும் ஹோட்டல் அறைகளை வழக்கமான தங்குதலுக்கு அனுமதிக்க இம்மாதத் தொடக்கத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
“அப்போது முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் தங்களது பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான யோசனைகளை சமர்ப்பித்து உள்ளன. அவற்றுள் 80 ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது,” என்றார் அவர்.
எந்தெந்த ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்ற விவரம் அடங்கிய பட்டியலை கழகத்தின் இணையத்தளத்தில் காணலாம். அதன் தொடர்பில் விளக்கமளித்த செந்தோசா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாகி தியன் குவீ எங், தீவின் 17 ஹோட்டல்களில் பாதிக்கும் மேற்பட்டவை மீண்டும் பணி
களைத் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். எஞ்சிய ஹோட்டல்கள் இல்லத் தனிமை உத்தரவு ஏற்பாடுகளுக்காகப் பயன்
படுத்தப்பட்டு வருவதால் அவை பின்னர் பணிகளைத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
வில்லேஜ் ஹோட்டல் செந்தோசா, ஷங்ரி-லா ரசா செந்தோசா ரிசார்ட் அண்ட் ஸ்பா ஆகியன இன்னும் திறக்கப்பட வேண்டிய பட்டியலில் உள்ளன.
மேலும், தீவும் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த ஹோட்டல்கள் மற்றும் சுற்றுப் பயணத் தலங்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு மீண்டும் வர்த்தகத்தைத் தொடங்கிவிட்டதாக திரு தியன் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் தகவல்படி, சுமார் 10,900 பேர் இல்லத் தனிமை உத்தரவை ஹோட்டல் அறைகளில் நிறைவேற்றி வருகின்றனர்.
இது கடந்த திங்கட்கிழமை வரையிலான நிலவரம். ஹோட்டல்கள் தவிர, சொகுசுக் கப்பல்கள், கண்காட்சி மையங்கள், விடுமுறை பொழுது போக்குக் கூடங்கள் போன்றவையும் கொவிட்-19 நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மிதமான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு குணம் அடைந்து வரும் நோயாளிகள், கொவிட்-19 பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்போர் உள்ளிட்டோருக்காக இதுபோன்ற வசிப்பிடங்கள் பயன்
படுத்தப்படுகின்றன.