தம்மால் முடிந்த அளவிற்கு வலுவான அமைச்சரவையை அமைத்துள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரர்கள் தமக்கு அளித்துள்ள ஆதரவைப் பயன்படுத்தி, நாடு சந்தித்து வரும் கடுமையான பொருளியல், பொதுச் சுகாதாரச் சவால்களைத் தீவிரமாக எதிர்கொள்வேன் என்று திரு லீ கூறியிருக்கிறார். இஸ்தானாவில் இன்று நடந்த பதவியேற்பு சடங்கில், அதிபர் ஹலிமா யாக்கோப், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் ஆகியோர் முன்னிலையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், புதிய அமைச்சரவையின், புதிய அரசாங்கத்தின் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதா கக் குறிப்பிட்ட பிரதமர் லீ, சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார். “நமது அரசியல் நம்பிக்கைகள் எதுவாக இருப்பினும், முதலில் நாம் சிங்கப்பூரர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது,” என்றார் திரு லீ. உலகளவில் கொவிட்- 19 நோய்ப் பரவல் முன்னைவிட மோச மாகி இருப்பதாக திரு லீ தமது உரையின்போது குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றைக் கட் டுப்படுத்திய நகரங்களிலும் அது மீண்டும் தலையெடுத்து இருப்ப தைச் சுட்டிய அவர், அதனால்தான் புதிய தொற்றுகளைத் தொடக்கத் திலேயே கண்டறிந்து, வேரறுக்கும் விதமாக அரசாங்கம் கிருமித் தொற்றுப் பரிசோதனையையும் தடமறிதலையும் முடுக்கிவிட்டுள்ளதாகச் சொன்னார். முடிந்த அளவிற்கு வேலைகளைப் பாதுகாப்போம் என்றும் வேலை இழந்தவர்களுக்குப் புதிய வேலை தேட உதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். நோய்ப் பரவல் காரணமாக மூடப்பட்ட வர்த்தகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்க அரசாங்கம் உதவும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், சில தொழில் துறைகள் முன்பிருந்த நிலைக்குத் திரும்ப முடியாமல் போகலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
“அரசாங்கம் சில கடினமான தெரிவுகளை எதிர்கொள்ளக் கூடும். வர்த்தகங்களுக்கும் அதே நிலைதான். தொடர்ந்து இறங்கு முகத்தில் இருக்கும் தொழிலகங் களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவது அல்லது இனிமேலும் சாத்தியமில்லாத வேலைகளில் ஊழியர்களைப் பிடித்து வைத்து இருப்பதும் கட்டுப்படியாக இருக் காது,” என்றார் திரு லீ. அதனால், புதிய வேலைகளுக் கேற்ற திறன்களை ஊழியர்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் மீண்டும் இரட்டிப்பாக்கப்படும் என் றும் அவர் குறிப்பிட்டார். “நமது திறன்களை வளர்க்க வும் புதிய தொழில்துறைகளைப் பெருக்ககவும் புதிய வேலைகளை உருவாக்கவும் ஏதுவாக நமது வளங்களில் முதலீடு செய்வதே சிறந்த, நீண்டகாலத் தீர்வாக இருக்கும்,” என்றார் பிரதமர். பொருளியல் வளப்பத்துடன், தங்கள் நாட்டிற்காக சிங்கப்பூரர் கள் கொண்டுள்ள பரந்த இலக்கு களும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
மேல் விவரங்கள், நாளைய அச்சுப் பிரதியில்...