இந்து கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், புத்த கோயில்கள், சீக்கிய கோயில்கள் என மொத்தம் 12 வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) முதல், 100 பேர் வரை பங்கேற்க, இன்று (ஆகஸ்ட் 3) சிங்கப்பூரில் அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகள் வழிவகுக்கின்றன.
வழிபாட்டுச் சேவைகளுக்கு இந்த தளர்வு பொருந்தும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதைவிட இருமடங்கு ஆட்கள் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த இடங்களில் 100 பேர் வரை சென்றால் அவர்கள் 50 பேரைக்கொண்ட இரு குழுக்களாகப் பிரிக்கப்படுவர் என்று கலாசார, சமூக, இளையர் பிரிவு அமைச்சு தெரிவித்தது.
இவ்விரு குழுக்களும் பயன்படுத்தும் வாயில் உட்பட அனைத்து இடங்களும் பிரிக்கப்படும். அவர்கள் உள்ளே நுழைவது, வெளியே செல்வது போன்ற நேரங்கள் மாறுபட்டிருக்க வேண்டும்.
இனம் மற்றும் சமய நல்லிணக்கத்துக்கான தேசிய செயற்குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் சமயத் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, சோதனை முயற்சியாக இந்த 12 சமயத் தலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அந்த சமயத் தலங்கள்:
1. அசியாஃபா பள்ளிவாசல் (வெள்ளிக்கிழமை தொழுகைக்காக)
2. முஜாஹிதின் பள்ளிவாசல் (வெள்ளிக்கிழமை தொழுகைக்காக)
3. அல்-இஸ்டிக்ஃபார் பள்ளிவாசல் (வெள்ளிக்கிழமை தொழுகைக்காக)
4. அல்-இமான் பள்ளிவாசல் (வெள்ளிக்கிழமை தொழுகைக்காக)
5. ஸ்ரீ மாரியம்மன் கோயில் (வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு மட்டும்)
6. ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயம் (சனிக்கிழமை வழிபாட்டுக்கு மட்டும்)
7. செயின்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும்)
8. ஜூரோங் கிறிஸ்டியன் தேவாலயம் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும்)
9. அமேசிங் கிரேஸ் பிரெஸ்பைடெரியன் தேவாலயம் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும்)
10. செங்காங் மெத்தடிஸ்ட் தேவாலயம் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும்)
11. கோங் மெங் சான் போர் கார்க் சீ மடாலயம் (வார இறுதிகளில் மட்டும்)
12. மத்திய சீக்கிய ஆலயம் (வார இறுதிகளில் மட்டும்)