நிறுவனங் களில் வேலைக்கு அமர்த்தப்படும் வெளிநாட் டினர் - குடிமக்கள் விகிதத்துக்கு நிறுவனங் களில் உடனடியாக வரையறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அப்போதுதான் அங்கு ஊழியர்களிடையே சமநிலை உண்டாகும் என்றும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் வாய் மன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இடையே நிறுவனங் களில் பாகுபாடு காட்டப்படுகிறது என்று சிங்கப்பூரர்கள் குரல் எழுப்பியிருக்கும் வேளையில், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைப் பிரதிநிதிக்கும் திரு லியோங் நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.
இதற்குத் தீர்வு காணும் பொருட்டு, வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதிச் சீட்டு ஒப்புதலையும் புதுப்பிப்பையும் அரசாங்கம் குறைக்க வேண்டும். அப்போதுதான் அந்த வேலைகள் சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்கும் என்றும் திரு லியோங் கூறினார்.
“ஊழியரணியில் வெளிநாட்டு ஊழியர்களை அதிகமாக சேர்த்துக்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு நல்ல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அது நமது உள்ளூர் ஊழியர்களுக்குப் பாதகமாக இருந்துவிடக்கூடாது. தங்கள் சொந்த நாட்டில் வேலைகளுக்கு கடுமையாக சிங்கப்பூரர்கள் போட்டியிடும்போது அது சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும்.
“சிங்கப்பூரில் வேலையில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை அரசாங்கம் வெளிப்
படையாகத் தெரிவிக்கலாம்.
“உதாரணத்துக்கு, நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் பிரிவில் உள்ள வேலைகளில் எத்தனை சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் இருக்கிறார்கள். வெளிநாட் டினர் எந்தெந்த நாடுகளிலிருந்து வந்தவர்கள் போன்ற புள்ளி விவரங்கள் வெளியிடப்படலாம்.
“தெளிவான தகவல் இல்லாமல், இங்கு வேலை செய்யும் வெளிநாட்டினரால் நமக்கு நன்மை ஏற்படுகிறதா என்று சிங்கப்பூரர்களால் உணர்ந்துகொள்ள முடியாமல் போகிறது,” என்றும் திரு லியோங் வலியுறுத்தினார்.
“நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களை சிங்கப்பூர் ஊழியரணியில் சேர்த்துக்கொள்ள அவர்களுக்கு நீண்ட வேலை அனுபவம் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.
“சிங்கப்பூரில் அதிக காலம் வசிக்கும் நிரந்தரவாசிகளுக்கே குடிமக்களாகும் தகுதி வழங்கப்பட வேண்டும். அதற்கு அவர்கள் குடிமக்கள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் அதிகம் பங்கேற்றவர்களாக இருக்க வேண்டும்.
“வெளிநாட்டினருக்கு குடியுரிமை முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய குடிமக்கள் ஆணையம் என்ற அமைப்பு அமைக்கப்பட வேண்டும்,” என்பது போன்ற யோசனைகளை திரு லியோங் முன்வைத்தார்.