பிஎம்இடி எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்கள் துறையில் இருக்கும் வேலைகளில் வெளிநாட்டினர் பங்கு குறித்து தொகுதியில்லா உறுப்பினர் லியோங் மன் வாய் எழுப்பிய கேள்வி மன்றத்தில் பெருத்த விவாதத்தைக் கிளப்பியது.
பிஎம்இடி துறையில் உள்ளூர்வாசிகளைப் பாதுகாக்கும் அரசாங்க முயற்சிகள் குறித்து அவர் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கேள்வி எழுப்பினர்.
அவர்களுக்குப் பதில் அளித்த மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, பிஎம்இடி துறையில் 2014ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வேலைகளைப் பெற்ற உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 35,000 என்ற விகிதத்தில் வளர்ந்திருப்பதாக குறிப்பிட்டார். அதே காலகட்டத்தில் ‘எம்பிளாய்மண்ட் பாஸ்’, ‘எஸ் பாஸ்’ ஆகியவற்றைப் பெற்றவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 9,000க்கும் கீழ் என்ற அளவில் இருந்ததாகவும் அவர் சொன்னார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த திரு லியோங், அமைச்சர் தெரிவித்த காலகட்டத்தில் எத்தனை வெளிநாட்டினர் நிரந்தரவாசிகளாகவும் புதிய குடிமக்களாகவும் ஆனார்கள் என்ற மற்றொரு கேள்வியை முன்வைத்தார்.
இத்தகையோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 50,000 என இதற்கு முன்னர் கிடைத்த தகவல் ஒன்றையும் அவர் தெரிவித்தார். அந்த எண்ணிக்கையை அங்கீகரித்த அமைச்சர், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20,000 பேர் புதிய குடிமக்களாகவும் மேலும் 30,000 பேர் நிரந்தரவாசிகளாகவும் ஆனதாகக் குறிப்பிட்டார்.
“நமது வளங்கள் அத்தனையையும் நிரந்தரவாசிகளும் புதிய குடிமக்களும் ஆக்கிரமித்துக்கொள்வதாக திரு லியோங் சொல்ல முன்வருவதாகத் தோன்றுகிறது. ஆனால் நிலைமை அதுவல்ல.
“புதிய குடிமக்களிலும் நிரந்தரவாசிகளிலும் குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையில் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஊழியரணியில் பங்கேற்காதவர்கள். மற்றவர்கள் இங்குள்ள குடிமக்களை மணந்தவர்கள். தற்போது நடைபெறும் திருமணங்களில் மூன்றில் ஒன்று குடிமக்களுக்கும் குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் இடையில் நடப்பவை.
“இங்குள்ள குடிமக்களோடு புதிய குடிமக்களை சேர்த்துப் பார்க்கக்கூடாது என திரு லியோங் சொல்ல வருகிறாரா?
“இப்படி யோசிப்பதைக் காட்டிலும் பிஎம்இடி வேலைகளில் உள்ளூர்வாசிகளின் விகிதாச்சாரம் உயர்ந்து வருவதைக் கவனிக்க வேண்டும். இது எங்கும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ‘பிரமிப்பான சாதனை’,” என்று விளக்கினார் அமைச்சர் டியோ.
மேலும், புதிய குடிமக்களையும் ‘உண்மையான’ குடிமக்களையும் வேறுபடுத்த சிங்கப்பூர் தொடங்குமானால் ஒருவர் ‘உண்மையான’ குடிமகன் தகுதியைப் பெற எத்தனை ஆண்டுகால குடியுரிமை தேவைப்படும் என திரு லியோங்கைப் பார்த்து அமைச்சர் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த திரு லியோங், “அசல் சிங்கப்பூரர் அல்லது புதிய சிங்கப்பூர் என்பதில் வித்தியாசம் இருக்கப்போவதில்லை. ஒவ்வோர் ஆண்டும் புதிய குடிமக்களும் நிரந்தரவாசிகளும் வருவது இப்போதுள்ள மக்கள்தொகையில் ஏற்படும் தாக்கம் தொடர்பானது தமது கேள்வி,” என்றார்.
“இவ்வாறு ஆண்டுதோறும் 50,000 புதியவர்கள் வரும் நிலையில் பிம்எஇடி வேலைகளில் உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கை 35,000 என்ற அளவில் மட்டுமே வளர்ச்சி பெறுவது பிஎம்இடி வேலைச் சந்தையில் நெருக்கடியை உருவாக்கும் என்பதை மறுக்கமுடியாது,” என்றார் திரு லியோங்.
அதனை ஏற்றுக்கொண்ட திருவாட்டி டியோ, புதியவர்களில் பலர் ஊழியரணியில் இல்லை என்றும் சிங்கப்பூரர்களை மணந்தவர்கள் என்றும் தாம் ஏற்கெனவே ெசான்ன கூற்றை மீண்டும் வலியுறுத்தினார்.