சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயிற்சியில் இருக்கும் பாதிக்கு மேற்பட்ட விமானிகள், சிப்பந்திகளை வெளியேற்றுகிறது.
இவர்களில் அடிப்படைப் பயிற்சிக் காலத்தில் இருப்பவர்கள் தங்கள் பயிற்சியை முடித்த பின் வெளியேற்றப்படுவர். பல்வேறு விதமான பயிற்சிக் கட்டங்களில் 400க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இந்த ஊழியர்கள் பயிற்சியின் வெவ்வேறு காலகட்டத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பயிற்சியைப் பாதியில் நிறுத்தியோரில் பெரும்பாலானோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது.
எஞ்சிய ஊழியர்கள் பயிற்சியைத் தொடர்வதற்கு அனுமதியளிக்க எஸ்ஐஏ நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பயிற்சி விமானிகளுக்கு இரண்டு ஆண்டு காலம் பயிற்சியளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சிக்கு ஓர் ஆளுக்கு $250,000 செலவிடப்படுகிறது. விமானச் சிப்பந்திகள் மூன்று மாத காலப் பயிற்சியில் ஈடுபடவேண்டும்.
வெளிநாட்டில் பயிற்சியை முடிக்க முடியாமல் காத்திருக்கும் பயிற்சி விமானிகளுக்குச் சம்பளமில்லா விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் பயிற்சியை மீண்டும் தொடங்கும் வரை தொடரும்.