‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது தமிழர்களின் பொதுவான நம்பிக்கை. ஆனால், கடந்த சில மாதங்களாக கொரோனா நெருக்கடியால் வர்த்தகம் பெரிதும் சரிந்துவிட்ட நிலையில், அந்த நல்லகாலம் இப்போதே பிறந்துவிடாதா என்பதே லிட்டில் இந்தியா வர்த்தகர்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில், அவர்களுக்குப் பொங்கல் திருநாளைப் போல தீபாவளியும் மிக முக்கியமான காலகட்டம்.
ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிப் பண்டிகைக் காலத்திற்காக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பர். உள்ளூர்வாசிகள், வெளிநாட்டு ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகள் என மக்கள் கூட்டம் அங்கு நிரம்பி வழிய, தீபாவளி விற்பனை சூடுபிடிக்கும்.
ஆனால், கொவிட்-19 நோய்ப் பரவலாலும் கட்டுப்பாடுகளாலும் வர்த்தகம் வழக்கம்போல் இருக்காது என்பதை கடைக்காரர்கள் அறிந்திருக்கின்றனர்.
மக்களின் பாதுகாப்பு கருதி, இம்முறை கிண்டா சாலையில் தீபாவளி விற்பனைச் சந்தை இராது என்றாலும் இரவில் வண்ணமயமாக ஒளிரும் சாலைகள் பண்டிகை உணர்வை ஏற்படுத்தி, உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளன.
இத்தகைய சூழலில் லிட்டில் இந்தியாவில் தீபாவளி விற்பனை எப்படி இருக்கிறது என்பதை அங்குள்ள கடைக்காரர்களிடம் பேசி அறிந்து வந்தது தமிழ் முரசு.
மலேசிய வாடிக்கையாளர்கள் வர முடியாததால் வருத்தம்
பெரும்பான்மையான மலேசியா வாடிக்கையாளர்களை இம்முறை காண முடியவில்லையே என்ற ஏக்கம் பல கடைக்காரர்களிடம் தென்பட்டது.
கட்டுப்படியான விலையில், பற்பல வடிவமைப்புகளில் வரும் பாரம்பரிய ஆடைகளை தேக்கா சந்தைக்கு வந்து விரும்பி வாங்கிச் செல்லும் மலேசிய வாடிக்கையாளர்கள் எல்லைக் கட்டுப்பாடுகளால் தற்போது இங்கு வர இயலாது.
அதனால் இம்முறை விற்பனையில் அதிக பாதிப்பு இருக்கும் என்றார் ‘சகினா ஃபேஷன்ஸ்’ கடைஊழியரான திரு ப.தமிழரசன், 31.
“எங்களது வியாபாரம் பெரும்பாலும் மலேசிய வாடிக்கையாளர்களையே நம்பியுள்ளது. உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் இணையம் வழி நவீன உடைகளை தங்களது பிள்ளைகளுக்கு வாங்கி விடுகின்றனர். வெளிநாட்டிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யும் விலையும் சற்று அதிகரித்துள்ளதால் சற்று சிரமமாகத்தான் உள்ளது,” என்று கவலையுடன் சொன்னார் பாரம்பரிய சிறுவர் உடைகளை விற்கும் ‘பவானி காஸ்ட்யூம்ஸ்’ கடையின் உரிமையாளர் திருமதி வசந்தா சுதர்சனன், 58.
மாறாக, தமது கடையில் 90% வாடிக்கையாளர்கள் உள்ளூர்வாசிகள் என்பதால் இம்முறை தீபாவளி விற்பனையில் அதிக பாதிப்பு இருக்காது என்று கூறினார் ‘ஜூவல் பேலஸ்’ கடையின் நிர்வாக இயக்குநர் திரு முகம்மது நஜுமுதீன்.
தற்போதைய பொருளியல் சூழலில் வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன் குறைந்திருந்தாலும், பண்டிகைக்காக தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிச் செல்கின்றனர் என அவர் சுட்டினார்.
“எடுத்துக்காட்டாக, $500 மதிப்புள்ள ஆடைகளை வாங்கியவர் இம்முறை $350க்குச் செலவுகளைக் குறைத்திருப்பார். வரும் மாதங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட, சமூக, மங்கல நிகழ்ச்சிகள் அதிகமாக இடம்பெறும். அப்போது வர்த்தகமும் கூடும்,” என்று திரு நஜுமுதீன் நம்புகிறார்.
தாக்குப்பிடிக்கும் தையல் தொழில்
கடந்த மார்ச் மாதத்தில் இந்தியா சென்ற சக தையல்காரர் இன்னும் திரும்பாததால் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது என்றார் ‘பவானி காஸ்ட்யூம்ஸ்’ கடையில் தையல் பணியை மேற்கொள்ளும் திரு ரா. சாமிநாதன், 42.
தீபாவளிக்காக துணி தைக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், பெரும்பாலானோர் வழக்கமான வாடிக்கையாளர்கள்தான் என்றார்.
‘இமானுவல் ஃபேஷன்’ தையல், ஆடைக் கடைகளின் உரிமையாளரான திருமதி புனிதா தாஸ், 47, தையல் வியாபாரம் ஓரளவு தாக்குப்பிடிக்கிறது என்றாலும் ஆடை விற்பனைக்கு வாரயிறுதியில் வரும் வாடிக்கையாளர்களையே பெரிதும் நம்பியுள்ளதாகச் சொன்னார்.
பெரும்பாலும் பல கடைகளும் வெளிநாட்டில் இருந்தே பாரம்பரிய உடைகளை இறக்குமதி செய்ய, ‘லிபாஸ் ஃபேஷன்ஸ்’ கடை உள்ளூரில் இருந்தவாறே வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாரம்பரிய உடைகளை தைத்துத் தருகிறது. எடுத்துக்காட்டாக, ஆண் வாடிக்கையாளர் ஒருவர் தமக்குப் பிடித்த நிறத்தையும் வடிவமைப்பையும் தேர்வு செய்ய, அவரின் உடல் அளவு எடுக்கப்பட்டு சில நாள்களிலேயே தனித்துவ பாரம்பரிய உடை தயாராகிவிடுகிறது.
இந்திய-மேற்கத்திய பாணிகள் கலந்த பாரம்பரிய உடைகளுக்கு உள்ளூர் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் அதில் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார் ‘லிபாஸ் ஃபேஷன்ஸ்’ கடையின் உரிமையாளர் திரு நதீம்.
‘உள்ளூர்வாசிகள் ஆதரவு தேவை’
ஜூன் மாதத்திலிருந்து இரண்டாம் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட, தமது வழக்கமான வாடிக்கையாளர்கள் கடைக்குத் திரும்புவது அதிகரித்து வருகிறது என்று ‘காஸ்ட்யூம் ஜுவல்லரி’ விற்பனையில் ஈடுபட்டுள்ள ‘சுஜி ஜுவல்லரி’ கடையின் உரிமையாளர் திரு
க.குணசேகரன், 57, தெரிவித்தார்.
கிருமிப் பரவல் நிலவரம் மேம்பட்டு வர, தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் இவர் இந்தியாவில் இருந்து புதுரக ‘நெக்லஸ்’, வளையல், தோடு வகைகளை இறக்குமதி செய்துள்ளார்.
“இக்கட்டான காலகட்டம் என்றாலும் முடிந்தவரை தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றே பலரும் நினைப்பர். மலேசிய வாடிக்கையாளர்கள் இல்லாத நிலையில், உள்ளூர்வாசிகள் ஆதரவு நல்கினாலே போதுமானது,” என்றார் திரு குணசேகரன்.
லிட்டில் இந்தியா ஆர்க்கேட்
தற்போது லிட்டில் இந்தியா ஆர்க்கேட்டினுள் நுழைய, ஒருவர் ‘சேஃப் என்ட்ரி’ மின்னிலக்க வருகைப்பதிவைப் பூர்த்திசெய்வதோடு உடல் வெப்பநிலைப் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும்.
இது வாடிக்கையாளர்களுக்கு அசெளகரியத்தை தரக்கூடும் என்றும் கேம்பல் லேனை ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையில்தான் வாடிக்கையாளர்கள் லிட்டில் இந்தியா ஆர்க்கேட்டிற்கு வருகின்றனர் என்றும் சொன்னார் அங்கு செயல்படும் ‘காஸ்ட்யூம் ஜுவல்லரி’ கடையின் ஊழியர் ஒருவர்.
பண்டிகைக் காலத்தில் கேம்பல் லேன் வழியான இணைப்புப் பாதையிலும் மக்கள் லிட்டில் இந்தியா ஆர்க்கேட்டினுள் நுழைய ஏற்பாடு செய்தால் அது அங்கிருக்கும் எல்லா வர்த்தகங்களுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.
கொரோனா தாக்கத்தால் இம்முறை 20% வரை விற்பனை குறையலாம் என்று கணேசன் விலாஸ் தின்பண்டக் கடையின் உரிமையாளரான திரு எஸ்.சுகுமாறன், 32, கூறினார்.
எது எப்படி இருந்தாலும், மக்கள் தீபாவளியைக் கொண்டாடத் தவற மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், இன்னும் ஒரு மாதம் இருப்பதால் வரும் நாள்களில் வாடிக்கையாளர் வருகை அதிகமாக இருக்கும் என வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.