சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி இரண்டாவது காலாண்டைக் காட்டிலும் மூன்றாவது காலாண்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு அடிப்படையில் 7.9 விழுக்காடு உயர்ந்திருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சு வெளியிட்ட முன்னோட்டக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன.
இரண்டாம் காலாண்டில் காலாண்டு ஜிடிபி விகிதம் 13.2 விழுக்காடு சரிந்ததற்குப் பிறகுதான் இந்த மீட்சி நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டின்போது ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நிலவிய நோய்ப்பரவல் முறியடிப்பு நடவடிக்கையால் மக்கள் நடமாட்டத்தின்மீதும் வர்த்தக செயல்பாடுகளின் மீதும் கடும் கட்டுப்பாடுகள் நிலவின. ஜூன் மாதம் முதல் படிப்படியாக வழக்கமான செயல்பாடுகளைத் தொடங்கிய சிங்கப்பூர், இதனால் மிதமான பொருளியல் மீட்சியைக் கண்டு வருகிறது.