அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டது குறித்து சிங்கப்பூர் தலைவர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் நிலவரம் அமைதியாக முடிவடைய தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாக மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
“அமெரிக்க காங்கிரசில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடும் அதிர்ச்சியளிக்கும் காட்சிகளை நான் பார்த்தேன். இது அமைதியாக முடிவடைய நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். அமெரிக்கரிகளுக்கு இன்றைய தினம் சோகமான தினம்,” என்று அவர் பதிவிட்டார்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்தேறிய நிகழ்வுகள் “நம்ப முடியாதவை,” என்று நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் கூறியுள்ளார்.
“இது எப்படி நடந்தேறியது? மக்களைக் கோபமடைய வைப்பது எளிதாகிவிட்டது. இதனால் விளைவுகளும் ஏற்படும்,” என்றார் அவர்.
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் அதிர்ச்சியளிக்கும் காட்சிகளைப் பார்ப்பதற்கு மனம் வலிப்பதாக கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் சொன்னார்.
“அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகாரம் மாற்றிவிடப்பட நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று தமது ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை டிரம்ப ஆதரவாளர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து அக்கட்டடம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்களும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களும் அதிர்ச்சி தெரிவித்துள்ள நிலையில், சீனா இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடர்பில் கேலி செய்துள்ளது.