தங்கு விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இவ்வாண்டு இறுதிக்குள் தடுப்பூசி போடப்படும் என்று மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் குழுக்களில் இடம்பெற்றுள்ள இந்த ஊழியர்களுக்கு, அவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் கிருமித்தொற்று பரவும் அபாய நிலையைப் பொறுத்து தடுப்பூசி வழங்கப்படும் என்றார் டாக்டர் டான். அதாவது அதிக அபாயமுள்ள விடுதிகளில் வசிப்போருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான கால வரையறை, அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் போன்றவை பற்றி அல்ஜுனிட் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களின் வேலை, விடுதி வாழ்க்கை முறைகளால் அவர்களுக்கு கொவிட்-19 தொற்று பரவி பெரிய குழுமங்கள் உருவானதாக டாக்டர் டான் தெரிவித்தார்.
தேசிய அளவிலான தடுப்பூசி வழங்கும் உத்தியின் அடிப்படையில் சிங்கப்பூரர்களுக்கும் இங்கு நீண்டகாலம் வசிக்கும் அனுமதி உடையவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்பதால், வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதால் கிருமி வெகுவாகப் பரவும் நிலை குறைவதுடன் ஒட்டுமொத்த அபாயம் குறைந்து, சமூகத்தில் கிருமித்தொற்று பரவுவதைத் தடுக்க முடியும்.
அதன் மூலம் சுகாதாரத்துறை ஊழியர்கள், வசதிகளின் மீதான அழுத்தமும் குறையும் என்றார் அவர்.
சுகாதார அமைச்சுடன் சேர்ந்து தடுப்பூசி போடும் அட்டவணை மற்றும் விவரங்கள் குறித்து மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருகிறது எனக் கூறிய அவர், தடுப்பூசிகள் சிங்கப்பூரில் பெறப்படுவதன் அடிப்படையில் தடுப்பூசி நடைமுறை இருக்கும் என்றார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான தடுப்பூசி முயற்சிகளோடு, தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பலன்கள், பாதுகாப்பு ஆகியவை பற்றிய விரிவான விளக்க பிரசாரமும் இருக்கும் என்றார் டாக்டர் டான்.
பொதுவான பக்கவிளைவுகள், ஒவ்வாமை அபாயங்கள் பற்றி விவரிக்கப்படுவதுடன் காணொளிகள், பிரசுரங்கள் போன்றவை ஊழியர்களின் தாய்மொழியிலும் விநியோகிக்கபப்டும்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான இதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரங்களில் அரசுசாரா அமைப்புகளுடனும் இயன்றவரை சேர்ந்து அரசாங்கம் பணிபுரியும் என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் பதிவான மொத்த கிருமித்தொற்று சம்பவங்களில் 90 விழுக்காடு விடுதிகளில் பதிவானவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயினும், கடந்த ஆண்டு நவம்பர் முதல் தங்குவிடுதிகளில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.