கட்டுமான நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஒருவர் இரண்டடுக்கு தரைவீடு ஒன்றின் தளத்தில் இருந்த திறவையில் விழுந்து உயிரிழந்தார். அந்த வீட்டில் சில புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான அந்த 53 வயது ஆடவர், புதுப்பிப்புப் பணிகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
டன்னன் ரோட்டுக்கு அருகில் உள்ள தனியார் பேட்டையில் எண் 38 யுனிவர்சிட்டி வாக் எனும் முகவரியில் அமைந்துள்ள அந்த ஈரடுக்கு வீட்டில் தளத்தில் இருந்த திறவை ஒன்றின் வழியாக விழுந்த அவர் 4.7 மீட்டர் கீழே இருந்த படிக்கட்டின் மீது விழுந்தார்.
இந்த விபத்து இம்மாதம் 10ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த மாதத் தொடக்கத்திலிருந்து இதையும் சேர்த்து 4 வேலையிட மரணங்கள் பதிவாகியதாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது. இந்த 4 சம்பவங்களின் தொடர்பிலும் அமைச்சு விசாரித்து வருகிறது.
பிப்ரவரி 10 அன்று காலை 11.40 மணியளவில் இந்த விபத்தின் தொடர்பில் உதவி கோரி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. விபத்தில் காயமடைந்த அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்; அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஜேஎம்எஸ் கன்ஸ்ட்ரக்ஷன் எனும் கட்டுமான நிறுவனத்தின் இரு இயக்குநர்களில் ஒருவரான திரு கோ கோக் ஹெங்தான் அந்த விபத்தில் உயிரிழந்தாக நம்பப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.
யுனிவர்சிட்டி வாக்கில் உள்ள அந்த வேலையிடத்தில் அனைத்துப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
அபாயங்களை ஆய்வு செய்த பிறகே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் தளங்களில் உள்ள திறவைகள் மூடப்பட்டு அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகே பணி தொடங்க வேண்டும் எனவும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.